×

பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் அவசர வழக்கு: சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை, வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் எடப்பாடிக்கு புதிய சிக்கல்

சென்னை: அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலை, அக்கட்சியின்  தலைமை அறிவித்துள்ளது. இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிலையில், ஓபிஎஸ் தரப்பினர் தேர்தலுக்கு தடை கேட்டு தொடர்ந்துள்ள அவசர வழக்கின் மீது இன்று விசாரணை நடத்தப்படுவதால், எடப்பாடி போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், நீதிமன்றம் எடுக்கும் முடிவை பொறுத்தே அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்வு நடைபெறுமா, இல்லையா என்பது தெரியவரும்.
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுக 4 அணிகளாக செயல்பட்டு வருகிறது. அதிமுகவை உரிமை கொண்டாடி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையே மோதல் ஏற்பட்டு, நீதிமன்றங்களில் சட்டப் போராட்டமும் நடத்தப்பட்டது.

இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, ஜூலை 11ம்தேதி பொதுக்குழுவை கூட்டி ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டு, இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், அதிமுக சட்ட விதிகளும் மாற்றி அமைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். ஆனால் உச்ச நீதிமன்றம், எடப்பாடி அணியினர் கூட்டிய பொதுக்குழு செல்லும் என்று கடந்த மாதம் தீர்ப்பளித்தது. இதை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியை, அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்வு செய்வதற்கான தேர்தல் வேலைகள் கட்சியில் மும்முரமாக நடந்து வருகிறது. அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமை கழக செயலாளர்கள், கடந்த வாரம் கூடி இதற்கான ஒப்புதலை அளித்தனர்.

இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான அறிவிப்பு நேற்று முன்தினம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இதுகுறித்து அதிமுக தேர்தல் ஆணையாளர்களாக நியமிக்கப்பட்ட, நத்தம் விசுவநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘அதிமுக சட்ட திட்ட விதியின்படி ‘அதிமுக பொதுச்செயலாளர்’ தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுகிறவர்கள் 18ம் தேதி (நேற்று), 19ம் தேதி (இன்று) ஆகிய 2 நாட்கள் ரூ.25 ஆயிரம் கட்டணம் செலுத்தி மனு தாக்கல் செய்யலாம். 20ம் தேதி வேட்பு மனு பரிசீலனை, 21ம் தேதி பிற்பகல் 3 மணி வரை, வேட்பு மனு திரும்ப பெறலாம். 26ம் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். பதிவு செய்யப்பட்ட வாக்குகள் வருகிற 27ம் தேதி திங்கள் 9 மணி முதல் எண்ணப்படும்’ என்று அறிவிக்கப்பட்டது.

அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட 10 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிந்தும், 10 மாவட்ட செயலாளர்கள் வழிமொழிய வேண்டும். கட்சியின் தலைமை அறிவிப்பை  தொடர்ந்து, அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி, நேற்று காலை  11 மணிக்கு சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில்,  தேர்தல் ஆணையாளர்களாக நியமிக்கப்பட்ட நத்தம் விசுவநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோரிடம் வேட்புமனுவை வழங்கினார். அவருக்கு 10 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிந்தும், வழிமொழிந்தும் இருந்தனர். பின்னர், அவர் வேட்புமனுவை தாக்கல் செய்தார். முன்னதாக காலை 11 மணிக்கு எடப்பாடி பழனிசாமி, அதிமுக கட்சி தலைமை அலுவலகத்துக்கு வந்து, அங்குள்ள ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து, அவரது சிலை அருகே வேட்புமனுவை வைத்து வழிபட்டார்.

அவர் வேட்புமனு தாக்கல் செய்தபோது கட்சியின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, வேலுமணி, சி.விஜயபாஸ்கர், திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார் மற்றும் கட்சியின் முன்னணி தலைவர்களும் உடன் இருந்தனர். எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக மேலும் 37 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல் செய்ய வரும்போது, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் கட்சி தலைமை அலுவலகத்துக்கு வந்து பிரச்னை செய்ய வாய்ப்புள்ளது என்று அதிமுக தலைமை, ஏற்கனவே போலீஸ் பாதுகாப்பு கேட்டு மனு தாக்கல் செய்திருந்தனர். இதையொட்டி,  ராயப்பேட்டை பகுதியில் அதிமுக அலுவலகம் அமைந்துள்ள இடத்தில் ேநற்று ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தாலும், இன்று மாலை 3 மணி வரை மனு தாக்கல் செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், எடப்பாடி தவிர வேறு யாரும் மனு தாக்கல் செய்ய மாட்டார்கள் என்றே கூறப்படுகிறது. இதனால், அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதி என்று அவரது ஆதரவாளர்கள் கூறிவந்தனர். இந்நிலையில், வேட்புமனு பரிசீலனை 20ம் தேதி (திங்கள்) காலை 11 மணிக்கு நடைபெறும். வேட்புமனுவை 21ம் தேதி (செவ்வாய்) பிற்பகல் 3 மணி வரை திரும்ப பெறலாம். போட்டி இருந்தால் வருகிற 26ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனால், வருகிற 21ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு வேட்புமனு திரும்ப பெறுவதற்கான காலக்கெடு முடிந்ததும், எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலாளராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், மனோஜ் பாண்டியன் தன்னை கட்சியில் இருந்து நீக்கியதை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த மனு, நீதிபதி குமரேஷ்பாபு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த மனுவுக்கு அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்குமாறு உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 11ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த தடை விதிக்குமாறு மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் மற்றும் ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் தனித்தனியாக  அதிமுக பொதுச் செயலாளர் தேர்வை எதிர்த்து வழக்குத் தொடர்ந்துள்ளனர். மனோஜ் பாண்டியன் தரப்பில் அவரது வழக்கறிஞர் இளம்பாரதி நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்காக முறையீடு செய்தார். இந்த அவசர முறையீட்டை ஏற்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி ராஜா, இந்த அவசர மனுவை நீதிபதி கே.குமரேஷ் பாபு நாளை (இன்று) விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார். அதன்படி மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனு, நீதிபதி குமரேஷ்பாபு முன்பாக இன்று காலை 10 மணியளவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. நீதிமன்றம் எடுக்கும் முடிவை பொறுத்தே அதிமுக பொதுச்செயலாளர் தேர்வு நடைபெறுமா இல்லையா என்பது தெரியவரும்.

தேர்தல் ஆணையத்திற்கு ஓபிஎஸ் கடிதம் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து வழக்கு தொடர்ந்த ஓ.பன்னீர்செல்வம் இதுதொடர்பாக தலைமை தேர்தல் ஆணையத்திற்கும் நேற்று கடிதம் அனுப்பினார். அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது: தேர்தல் ஆணையத்தின் பதிவுகளின்படி, அதிமுக கட்சியின் சட்டப்பிரிவு 20(1)ன்படி, ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் கட்சியின் தலைமைப் பொறுப்பில் உள்ளனர். அவர்களே கட்சியின் முழு நிர்வாகத்திற்கும் பொறுப்பேற்கின்றனர். இந்நிலையில், ஒருங்கிணைப்பாளரிடம் ஒப்புதல் பெறாமல் பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது சட்டவிரோதமானது, சட்டத்திற்கு உட்பட்டது அல்ல. அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் 35 மற்றும் 35.1வது பத்தியின்படி, பொதுக்குழு தீர்மானங்களால் பாதிக்கப்பட்டவர்கள் உரிய நீதிமன்றத்தை நாடி நிவாரணம் பெறலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் தீர்ப்பின் 38வது பத்தியில் பொதுக்குழு தீர்மானங்களில் தலையிடவில்லை எனவும், அது தொடர்பான சிவில் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றமே அதுகுறித்து முடிவெடுக்கலாம் என்றும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்போது சிவில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. எனவே, இந்த நிலையில், பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் அறிவிப்பு சட்டவிரோதமானது. இந்த தேர்தல் அடிப்படையில் தேர்தல் ஆணையத்தின் பதிவேட்டில் எந்த மாற்றமும் செய்யக் கூடாது என கேட்டுக் கொள்கிறேன். மேலும், உண்மைகளை கருத்தில் கொண்டு சட்டத்தின் கீழ் நீதி வழங்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


Tags : O. Panneerselvam ,General Secretary ,Madras High Court ,Edappadi , O. Panneerselvam's urgent case against General Secretary election: Hearing in Madras High Court today, new problem for Edappadi after filing nomination
× RELATED அதிமுகவின் சின்னம், கொடியை பயன்படுத்த...