×

புற்றுநோயைத் தடுக்க புதிய வழி

நன்றி குங்குமம் டாக்டர்

குழந்தைகளுக்குத் தொற்றுநோய் ஏற்படாமல் இருக்க, பிறந்ததிலிருந்தே வரிசைகட்டித் தடுப்பூசிகள் போடுவதைப்போல, பெரியவர்களுக்குப் புற்றுநோய் வருவதைத் தடுக்கவும், ஏற்கனவே புற்றுநோய் இருந்தால் குணப்படுத்தவும் தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ள வேண்டிய காலம் வெகு தொலைவில் இல்லை.

உலக அளவில் அறிவியலாளர்களின் அயராத உழைப்பாலும்,  மருத்துவத் தொழில் நுட்பங்களில் ஏற்பட்டு வரும் மகத்தான முன்னேற்றங்களாலும் இது சாத்தியமாகி வருகிறது. புற்றுநோய் இல்லாத உலகம் படைப்பதற்குப் பாதை போடும் ‘தடுப்பு மருந்து சிகிச்சை’ (Immunotherapy) எனும் இந்தப் புதிய தொழில்நுட்பம், நமக்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய வரப்பிரசாதம்.புற்றுநோய் என்றால் என்ன?நம் உடலில் உள்ள செல்கள் கட்டுப்பாடில்லாமல் வளரும் நிலையில் இருந்தால், அந்த செல்களைப் புற்றுநோய் செல்கள் என்கிறோம். இத்தகைய செல்கள், அவை இடம்பெறும் உடலுறுப்பை அழிப்பதோடு மட்டுமல்லாமல், அருகில் உள்ள ஆரோக்கிய செல்களையும் அழிக்கத் தொடங்குகின்றன.

மேலும், ரத்தம் மற்றும் நிணநீர் வழியாக உடலின் ஓர் உறுப்பிலிருந்து மற்றொரு உறுப்புக்குப் பரவி, அந்த உறுப்பையும் பாதிக்கின்றன. நாளடைவில் ஒட்டு மொத்த ஆரோக்கியத்தைக் கெடுத்து உயிருக்கு ஆபத்தை உண்டாக்குகிறது, புற்றுநோய்.இத்தகைய ஆபத்தான புற்று செல்கள் உருவாவதற்கு மரபுரீதியான காரணங்கள் முதலிடம் வகித்தாலும், புகைப் பழக்கம், மதுப்பழக்கம், நார்ச்சத்து இல்லாத உணவுப் பழக்கம், உடற்பருமன், சுற்றுச்சூழல் மாசு உள்ளிட்ட நம் வாழ்க்கை முறைகளும் முக்கியக் காரணங்களாகின்றன.

அறிகுறிகள் என்ன?


வலியில்லாத கட்டி, பல வாரங்களுக்கு விடாத இருமல், குரலில் மாற்றம், உணவு விழுங்குவதில் சிரமம், நாட்பட்ட அஜீரணம், ஆறாத காயம், மலத்தில், சிறுநீரில் அல்லது மூக்கிலிருந்து ரத்தம் வெளியேறுவது, ஏற்கனவே இருந்த மறுஅளவிலோ, நிறத்திலோ மாற்றம் அடைவது, காரணமில்லாமல் எடை குறைவது, நீடித்த சோர்வு போன்றவை புற்றுநோயின் பொதுவான அறிகுறிகள். இவற்றில் ஏதாவது ஒன்று தெரிந்தாலே மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். அப்போதுதான் புற்றுநோய்க்கு ஆரம்ப நிலையில் சிகிச்சை பெற்று, உயிருக்கு ஆபத்து வராமல்
பார்த்துக்கொள்ளலாம்.

மேலை நாடுகளில் முன் பரிசோதனைமுறைகள் வழக்கத்தில் உள்ளன. ஆனால், நம் நாட்டிலோ புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியும் வசதிகள் உள்ள போதிலும், போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால், பலரும் நோய் முற்றிய நிலையில்தான் சிகிச்சைக்கு வருகின்றனர். இதுவே இறப்புக்கு வழி அமைக்கிறது.

நவீன தடுப்பூசிகள்

பொதுவாக, ஆரோக்கியமாக உள்ளவர்களுக்குப் பின்னாளில் நோய் வராமல் தடுப்பதற்குத்தான் தடுப்பூசிகள் பயன்படுத்தப்படுவது வழக்கம். கருப்பை வாய்ப் புற்றுநோய் மற்றும் கல்லீரல் புற்றுநோயைத் தடுக்கும் தடுப்பூசிகள் இந்த வகையைச் சேர்ந்தவை. ஆனால், புற்றுநோயைப் பொறுத்த அளவில் நோய் ஏற்பட்டவருக்கும் தடுப்பூசி பயன்படுகிறது.‘தடுப்பு மருந்து சிகிச்சை’ (Immunotherapy) எனும் இந்தப் புதிய தொழில்நுட்பத்தில் பல தடுப்பூசிகள் ஆராய்ச்சி நிலையில் உள்ளன. அவற்றில் நல்ல பலன் தருவதாக உறுதி செய்யப்பட்டு நோயாளிகளுக்குப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டவை இவை:

பெம்புரோலிசுமாப் (Pembrolizumab). இதன் வணிகப்பெயர் Keytruda.

நிவோலுமாப் (Nivolumab). இதன் வணிகப்பெயர் Opdivo.

செமிப்லிமாப் (Cemiplimab) இதன் வணிகப்பெயர் Libtayo.

இவை எப்படிப் புற்றுநோயைத் தடுக்கின்றன?

சாலையில் வாகனங்களின் வேகத்தைக் கட்டுப்படுத்துவதற்கு ‘பேரிகாட்கள்’ வைத்திருப்பதைப் பார்த்திருப்பீர்கள். அதுபோல் உடலுக்குள் அந்நியப் பொருட்கள் நுழைவதைத் தடுப்பதற்கென சிறப்பு செல்கள் (Check points) உள்ளன. சிலருக்கு இந்த செல்கள் உறக்க நிலையில் இருக்கும். இதைப் பயன்படுத்தி, புற்றுசெல்கள் அவர்கள் உடலில் பரவத் தொடங்கும். இவர்களுக்கு உறக்க நிலையில் உள்ள ‘பேரிகாட்’ செல்களைத் தட்டி எழுப்பும் விதமாக மேற்சொன்ன தடுப்பூசிகளைக் கண்டுபிடித்திருக்கின்றனர்.

உதாரணமாக, ‘மெலனோமா’ எனும் சருமப் புற்றுநோய் செல்கள் PD-1 எனும் புரத மூலக்கூற்றை உற்பத்தி செய்து ‘பேரிகாட்’ செல்களை உறங்க வைத்து விடுகிறது. இதனால் அந்தப் புற்றுநோய் எவ்விதக் கட்டுப்பாடும் இல்லாமல் வளர்ந்து, சருமத்தைப் பாதிக்கிறது. இவர்களுக்கு, PD-1 எனும் புரதத்தை அழிக்கும் விதமாக ‘T-VEC’ தடுப்பூசியைக் கண்டு
பிடித்திருக்கின்றனர். இதைப் போட்டுக் கொண்டவர்களுக்கு உறக்க நிலையில் உள்ள ‘பேரிகாட்’ செல்கள் விழிப்புற்று, உடலில் வளரும் புற்றுநோய் செல்களைக் கண்டறிந்து அழிக்கத் தொடங்குவதால், நோய் குணமாகிறது.

புராஸ்டேட் புற்றுநோய்க்குப் புதிய தடுப்பூசி

அமெரிக்காவில் புராஸ்டேட் புற்றுநோய்க்கு ‘Sipuleucel-T’ (Provenge) எனும் புதிய தடுப்பூசியைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. உடலில் ‘டி’ செல்கள் (T cells) எனும் பெயரில் நோய்ப் பாதுகாப்பு செல்கள் உள்ளன. இந்த செல்களுக்குப் புற்றுநோய் செல்களைப் பிரித்துணரும் ஆற்றலை இந்தத் தடுப்பூசி வழங்குகிறது. அப்போது ஓர் உறுப்பில் புதிதாகத் தோன்றும் புற்றுசெல்களை இவை உடனே கண்டறிந்து, அவற்றைத் தாக்கி அழிக்கின்றன. இதன் பலனால், அந்த உறுப்பில் புற்றுநோய் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

எப்படித் தயாரிக்கின்றனர்?

புராஸ்டேட் புற்றுநோய் உள்ளவரின் டி செல்களை அகற்றி மரபணுப் பொறியியல் தொழில்நுட்பம் மூலம் GM-CSF எனும் புரதத்துடன் கலந்து அல்லது கதிரியக்கம் மூலம் பக்குவப்படுத்தி,  மீண்டும் அதே நோயாளிக்கு அதைச் செலுத்துகின்றனர். இப்போது இந்த செல்கள் புராஸ்டேட் புற்றுசெல்களை அழிக்கும் தன்மையைப் பெற்றுவிடுவதால். நோய் கட்டுப்படுகிறது. இந்தத் தடுபூசிகளை மார்பகப் புற்றுநோய், சிறுநீர்ப்பைப் புற்றுநோய், குடல் புற்றுநோய், ரத்தப் புற்றுநோய் ஆகியவற்றுக்கும் பயன்படுத்த முயற்சிகள் நடக்கின்றன.

பொதுவாக, இப்போதுள்ள புற்றுநோய் சிகிச்சைகளுக்கு உடல் மெலிதல், முடி உதிர்தல், வாய்ப்புண், உணவு சாப்பிட முடியாத நிலைமை, சோர்வு போன்ற பக்கவிளைவுகள் உண்டு. இதற்குப் பயந்தே பலரும் புற்றுநோய்க்கு முறையான சிகிச்சை எடுக்கத் தயங்குகின்றனர். ஆனால், இந்தப் புதிய நவீன மருந்துகளுக்கு எவ்விதப் பக்கவிளைவுகளும் இல்லை என்பது முக்கியமான பாதுகாப்பு அம்சம். இதனால்தான் உலக அளவில் இவற்றுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. விரைவில் இந்தியாவுக்கும் வந்துவிடும்.

புற்றுநோய்க்கும் உண்டு தடுப்பூசி!

1.கருப்பை வாய்ப் புற்றுநோய்க்குத் தடுப்பூசி: பத்து வயது முடிந்த பெண்கள்  ‘ஹெச்பிவி’ (HPV) தடுப்பூசியைப்  போட்டுக்கொள்ள வேண்டும். பத்து வயதில் போட்டுக் கொள்ளவில்லை என்றால், 45 வயதுக்குள் எப்போது வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம். முதலில் ஒரு ஊசியைப் போட்டுக்கொண்டு, இரண்டு மாத இடைவெளியில் இரண்டாம் தவணை, அடுத்த 4 மாத இடைவெளியில் மூன்றாம் தவணையைப் போட்டுக்கொள்ள வேண்டும்.

2.கல்லீரல் புற்றுநோய்க்குத் தடுப்பூசி: மஞ்சள் காமாலையைத் தடுக்கும் ‘ஹெப்படைடிஸ் பி தடுப்பூசி’  கல்லீரல் புற்றுநோயையும் தடுக்கிறது. முதல் ஊசியைப் போட்டுக்கொண்டு, முறையே ஒரு மாதம், ஆறு மாதம் இடைவெளியில் மற்ற இரண்டு தவணைகளைப் போட்டுக்கொள்ள வேண்டும்.

3.புராஸ்டேட் புற்றுநோய்க்குத் தடுப்பூசி: பொதுவாக, புராஸ்டேட் புற்றுநோய்க்கு ஹார்மோன் சிகிச்சை கொடுக்கப்படுவதுதான் வழக்கம். அதில் குணப்படுத்த முடியாத புராஸ்டேட் புற்றுநோயாளிகளுக்கு தற்போது ‘Sipuleucel-T’ (Provenge) எனும் தடுப்பூசி அமெரிக்காவில்  வழங்கப்படுகிறது.

4.தோல் புற்றுநோய்க்குத் தடுப்பூசி : ‘மெலனோமா’ எனும் தோல் புற்றுநோய்க்கு ‘T-VEC’ எனும் தடுப்பூசியை வழங்க அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு  (FDA) அனுமதி அளித்துள்ளது.

Tags :
× RELATED கவுன்சலிங் ரூம்