ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பதற்கு எந்த நியாயமும் இல்லை : ராமதாஸ் விமர்சனம்!!

சென்னை: ஆன்லைன் ரம்மியால் ஏற்படும் உயிர் பலிக்கு ஆளுநர் தான் பொறுப்பேற்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், சேலம் மாவட்டம் ஆத்தூரையடுத்த உடையார்பாளையத்தை சேர்ந்த பிரபு என்ற கூலித்தொழிலாளி  ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் தூக்கிட்டு  தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தியறிந்து வேதனையடைந்தேன்.  அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம்  ரத்து செய்யப்பட்ட பிறகு நிகழ்ந்த 43 ஆவது தற்கொலை இது.சூதாட்டத்தடை சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு நிகழ்ந்திருக்கும் 14-ஆவது தற்கொலை இது. கடந்த 3 நாட்களில் நிகழ்ந்த 2-ஆவது தற்கொலை இது . இவற்றுக்கு ஆளுனர் தான் பொறுப்பேற்க வேண்டும்! தமிழ்நாட்டிற்கு ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் ஏன் தேவை?  என்பது புள்ளிவிவரங்களுடன்  விளக்கப்பட்டிருக்கும் போதிலும்,  ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு  ஆளுனர் இன்னும் ஒப்புதல் அளிக்காமல் இருப்பதற்கு எந்த நியாயமும் இல்லை. இதில் ஆளுனர் பிடிவாதம் காட்டக்கூடாது! தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்படவில்லை என்றால் இத்தகைய தற்கொலைகள் தொடர்கதையாகி விடும்.  அப்படி ஒரு நிலை ஏற்படுவதை அரசும், ஆளுனரும் தடுக்க வேண்டும்.  அதற்காக ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு ஆளுனர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்!,என்றார்.

Related Stories: