சென்னை: ‘கள ஆய்வில் முதல்வர்’ திட்டத்தின், 2ம் கட்டமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 15 மற்றும் 16ம் தேதிகளில் சேலம் மண்டலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
‘‘கள ஆய்வில் முதல்வர்’’ திட்டம் கடந்த 1ம் தேதி தொடங்கப்பட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் முதற்கட்டமாக வேலூர் மண்டலத்திற்கு உட்பட்ட வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில், குடிநீர் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், வருவாய்த்துறை வழங்ககூடிய சேவைகள், ஊரக மேம்பாடு, நகர்ப்புற வளர்ச்சி, சாலை மேம்பாடு, வாழ்வாதாரத்தை உயர்த்துதல் போன்ற முக்கிய துறை சார்ந்த திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் அவற்றின் பயன்கள் பொதுமக்களுக்கு முழுமையாக சென்றடைகிறதா உள்ளிட்ட ஆய்வுகளை மேற்கொண்டார். மேலும், கள ஆய்வு திட்டத்தின் முதல் ஆய்வுக்கூட்டம் முதல்வர் தலைமையில் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் 4 மாவட்டத்தை சேர்ந்த உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஆய்வு நடத்தி பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.