தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு தலைவர், உறுப்பினர்களை நியமிக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு துணைத் தலைவர், உறுப்பினர்களை உடனடியாக நியமிக்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தினார். பாமக தலைவர் அன்புமணி நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:  இந்தியாவின் 8வது தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் காலாவதியாகி வரும் 28ம் தேதியுடன் ஓராண்டு நிறைவடையப் போகிறது.

ஆனால், 9வது தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் இன்னும் முழுமையாக செயல்பாட்டுக்கு வரவில்லை என்பது வருத்தமளிக்கிறது. 8வதுஆணையம் காலாவதியாகி 9 மாதங்கள் கழித்து தான் கடந்த நவம்பர் 27ம் தேதி 9வது ஆணையத்தின் தலைவராக ஹன்ஸ்ராஜ் ஆஹிர் நியமிக்கப்பட்டார். அதன்பின் 3 மாதங்கள் ஆன பிறகும் ஆணையத்தின் துணைத் தலைவரும், உறுப்பினர்களும் நியமிக்கப்படவில்லை. 9வது தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம்.

இதற்காக உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளோம். ஆனாலும் இந்த விஷயத்தில் ஒன்றிய அரசு தொடர்ந்து அலட்சியம் காட்டி வருவது ஏமாற்றமளிக்கிறது. கிரீமிலேயர் வரம்பு உயர்வு உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வேண்டியுள்ளன. அவற்றைக் கருத்தில் கொண்டு தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்களை ஒன்றிய அரசு உடனடியாக நியமிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: