மின் துறையை தனியார்மயமாக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு: புதுச்சேரியில் மின்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா

புதுச்சேரி: புதுச்சேரியில் மின்துறையில் கொண்டு வரப்படும் புதிய ப்ரிபெய்டு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சுயேச்சை சட்ட மன்ற உறுப்பினர் நேரு தலைமையில் மின்துறை தலைமை அலுவலகம் முன்பாக போராட்டம் நடைபெற்று வருகிறது. புதுச்சேரியில் மின்துறையை தனியார் மயமாக்கும் திட்டத்தை கைவிட கோரி முதல்வர் ரெங்கசாமி ஆதரவு சுயேட்சை சட்ட மன்ற உறுப்பினர் நேரு தலைமையில், சுமார் 15-க்கும் மேற்பட்ட சமூக அமைப்பினர் எதிர்த்து போராட்டங்களில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இத்தகைய சூழலில் ரூ.250 கோடி மதிப்பீட்டில் ப்ரீபெய்டு மின் மீட்டர் பொருத்தும் திட்டத்தை செயல்படுத்தும் அரசு முனைப்பு காட்டி வருகிறது. அந்த திட்டத்தின்படி நுகர்வோர் தங்களது மின்சார பயன்பாட்டை அறிந்து அதற்கான கட்டணத்தை முன்கூட்டியே செலுத்த வேண்டும். கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக உள்ள இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டதும், மின்சார கட்டணம் உயர்த்தப்படும் என்று பல்வேறு தரப்பினரும் அச்சம் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் சுயேட்சை சட்ட மன்ற உறுப்பினர் நேரு தலைமையில் போராட்டக்காரர்கள் மின்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா நடத்தினர். அவர்களை போலீசார் தடுத்ததால் இருதரப்பினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இதனால், அப்பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: