அண்ணாநகர்: கோயம்பேட்டில் குடியிருப்பின் 10வது மாடியில் இருந்து குதித்து தனியார் வங்கி மேலாளர் மனைவி தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக, போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் பங்கஜ்குமார் (46). இவர், நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மஞ்ஜாரி தேவ் (46). இவர்கள் கடந்த 2022 செப்டம்பர் முதல் கோயம்பேட்டில் உள்ள ஒரு அடுக்குமாடியில் வசித்து வருகின்றனர். நேற்று அதிகாலை சுமார் 4 மணி அளவில் 10வது மாடியில் இருந்து மஞ்ஜாரி தேவ் திடீரென குதித்தார். இதில், படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
இதை பார்த்த அக்குடியிருப்பை சேர்ந்த தயானந்தன் (27) என்பவர் வாட்ச்மேன் ராஜசேகரிடம் தெரிவித்து, காவல் கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் கொடுத்தார். அதன்பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கோயம்பேடு போலீசார், மஞ்ஜாரி தேவ் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் வழக்குபதிவு செய்து, பங்கஜ்குமாரிடம் விசாரணை நடத்தினர். அதில், மஞ்ஜாரி தேவ் கடந்த 15 வருடங்களாக மனநலம் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததும், நேற்று முன்தினம் இரவு தூங்கச் சென்ற இவர் நேற்று அதிகாலையில் 10வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. மேலும், போலீசார் பங்கஜ்குமார் மற்றும் குடியிருப்புவாசிகளிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வடமாநிலத்தை சேர்ந்த தனியார் வங்கி மேலாளர் ஒருவரின் மனைவி, மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோயம்பேடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.