தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி, 4வது மண்டலத்துக்கு உட்பட்ட சமத்துவ பெரியார் நகர், இந்திரா நகர், வெங்கடேஷ்வரா நகர், அஞ்சுகம் நகர் பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் நீண்ட தூரம் சென்று ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கி வரும் நிலை இருந்தது. இப்பகுதி மக்களின் கோரிக்கை ஏற்று, தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் ஒதுக்கி, ஆல்வின் கார்டன் பகுதியில் புதிய ரேஷன் கடை கட்டப்பட்டது.
இந்த புதிய ரேஷன் கடை திறப்பு விழா நேற்று நடந்தது. தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா கலந்து கொண்டு புதிய ரேஷன் கடையை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு பொருட்களை வழங்கினார். தொடர்ந்து, கலைஞர் நகர்ப்புற மேம்பாடு திட்டத்தில் ரூ.61.50 லட்சம் செலவில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா 2வது பிரதான சாலை, ஸ்ரீவெங்கடேஸ்வரா முதல் குறுக்கு தெரு, ஸ்ரீவெங்கடேஸ்வரா 2வது குறுக்கு தெரு, ஏஜிஎஸ் காலனி பிரதான சாலை, சமத்துவ பெரியார் நகர் பிரதான சாலை என 5 இடத்தில் புதிதாக அமைக்கப்பட்ட சாலைகளை எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், மண்டல குழு தலைவர் டி.காமராஜ், நியமன குழு உறுப்பினர் பெருங்களத்தூர் சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.