புதுடெல்லி: டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் சமீபத்தில் மருதாணி வைத்ததால் வலிப்பு நோய் ஏற்பட்ட 9 வயது சிறுமி சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். 3 ஆண்டுக்கு முன்பும் சிறுமிக்கு இதுபோன்று ஏற்பட்டுள்ளது. சிறுமி தனது கையில் மருதாணியை வைத்தவுடன் வலிப்பு ஏற்பட்டுள்ளது. சுயநினைவை இழந்து கீழே விழுந்த சிறுமி 20 விநாடிகளுக்கு வலிப்பால் பாதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் சிறுமியின் வலது கையில் மருதாணி வைக்கப்பட்டு, கையை அவரது முகத்துக்கு அருகே எடுத்து சென்ற சோதனை செய்தபோது அவருக்கு வலிப்பு ஏற்பட தொடங்கியது. நரம்பியல் பிரிவு மூத்த மருத்துவர் பி.கே.சேதி கூறுகையில், ‘‘ மருதாணி வாசனையின் தூண்டுதலால் தான் சிறுமிக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது” என்றார்.