நிலநடுக்கம் ஏற்பட்ட சில மணிநேரங்களில் துருக்கிக்கு இந்தியா செய்த உதவியை மிகவும் பாராட்டுகிறோம்: இந்தியாவில் உள்ள துருக்கி நாட்டு தூதர் ஃபிராட் சுனால் பேட்டி

டெல்லி: துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுமார் 1.40 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 6,000 கட்டிடங்கள்  விழுந்தன, 3 விமான நிலையங்கள் சேதமடைந்துள்ளது என இந்தியாவில் உள்ள துருக்கி நாட்டு தூதர் ஃபிராட் சுனால் தகவல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஃபிராட் சுனால் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்:

இது ஒரு பெரிய பேரழிவு எனவும் இதனால் 21,103 பேர் காயமடைந்துள்ளதாகவும், சுமார் 1.40 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். நிலநடுக்கம் ஏற்பட்ட சில மணிநேரங்களில் துருக்கிக்கு இந்தியா செய்த உதவியை நாங்கள் மிகவும் பாராட்டுகிறோம் என கூறிய ஃபிராட் சுனால், இந்தியாவின் மீட்பு குழு மற்றும் உபகரணங்கள் அடங்கிய முதல் விமானம் காலை துருக்கி வந்தடைந்ததாகவும், 2-வது விமானம் இன்று மாலைக்குள் துருக்கி சென்றடையும் எனவும் தெரிவித்தார்.

இதுதவிர துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு பிறகு பாதிக்கப்பட்டவர்களை மீட்க மோப்பநாய் உதவிகள் தேவைப்படும், அதற்கேற்றவாறு இந்தியா செயல்பட்டதை பாராட்டி துருக்கி நாட்டு தூதர் பேசியுள்ளார். நிலநடுக்கத்திற்கு பின் இந்தியர்களிடம் இருந்து எந்த கோரிக்கையும் எங்களுக்கு வரவில்லை என அவர் கூறினார்.

Related Stories: