3 சிறுவர்களுக்கு தொல்லை: வாலிபருக்கு 20 ஆண்டு சிறை

புதுச்சேரி: புதுவை மாநிலம் மங்கலம் அருகே கீழ்சாத்தமங்கலத்தை சேர்ந்தவர் கன்னியப்பன் (60). இவர் கோர்க்காடு ஏரிக்கரை பகுதியில் வாத்து பண்ணை நடத்தி வந்தார். இந்த வாத்து பண்ணையில் அவரது மனைவி சுபா (45). மகன்கள் ராஜ்குமார் (27) சரத்குமார் (25). கன்னியப்பனின் மாமனார் காத்தவராயன் (70) மற்றும் உறவினர்கள் பசுபதி (21), சிவா (21), மூர்த்தி (21), ஆறுமுகம் (58), வேலு (24) ஆகியோர் வேலை செய்து வந்தனர். வாத்துகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்று பராமரிக்கும் வேலைக்கு சில சிறுமிகளையும் வேலைக்கு அமர்த்தி இருந்தனர். அவர்கள் வாத்து பண்ணையிலேயே தங்கி இருந்தனர்.

இந்த நிலையில் பண்ணையில் வேலை செய்த 5 சிறுமிகளை அறையில் அடைத்து வைத்து அவர்களை பலாத்காரம் செய்தது தொடர்பாக கடந்த 2020-ம் ஆண்டு மங்கலம் போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில் கன்னியப்பன், சரத்குமார், ராஜ்குமார், பசுபதி, சிவா, மூர்த்தி ஆகிய 6 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. காத்தவராயன், சுபா ஆகிய 2 பேருக்கும் ஆயுள் தண்டனையும், ஆறுமுகத்திற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. இதற்கிடையே அதே வாத்துபண்ணையில் வேலை செய்த 3 சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டது தெரியவந்தது.

இது தொடர்பாக வாத்து பண்ணை உரிமையாளர் கன்னியப்பன், சரத்குமார், ராஜ்குமார், வேலு, மூர்த்தி, பசுபதி ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில் புதுச்சேரி போக்சோ சிறப்பு கோர்ட் தலைமை நீதிபதி செல்வநாதன் நேற்று தீர்ப்பளித்தார். பசுபதி என்பவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி செல்வநாதன் உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட 3 சிறுவர்களுக்கும் தலா ரூ.4 லட்சம் இழப்பீடு அரசு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.  மேலும் இந்த வழக்கில் கன்னியப்பன் உள்பட 5 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற பசுபதி, ஏற்கனவே சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சாகும் வரை ஆயுள் தண்டனை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Related Stories: