தண்டையார்பேட்டை: சென்னை அடுத்த பூந்தமல்லியை சேர்ந்தவர் இம்ரான் (25). சென்னை பூக்கடை பார்க்டவுன் வெங்கடாசல முதலி தெருவில் கடந்த ஒரு வருடமாக பாத்ரூம் உபயோக பொருட்கள் விற்பனை கடை நடத்தி வருகிறார். இவர், கடந்த 4ம்தேதி விற்பனை முடிந்ததும் கடையை பூட்டிவிட்டு உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்றுள்ளார். இந்நிலையில், இன்று அதிகாலை வீடு திரும்பினார். இதனிடையே, பாத்ரூம் உபயோக பொருட்கள் விற்பனை கடையில் இருந்து கரும்புகைவந்துள்ளது. திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு கட்டுப்பாடு அறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் உயர்நீதிமன்றம், வண்ணாரப்பேட்டை, ராயபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு அதிகாரி தேவேந்திரன் மற்றும் முனுசாமி ஆகியோர் தலைமையில் வீரர்கள் வந்து, 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருந்த போதிலும் கடையில் இருந்த பொருட்கள் எரிந்து சேதமானது.
இதில், பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பூக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில், மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. போலீசார் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் மற்ற கடைகளுக்கு பரவாமல் தடுக்கப்பட்டது. இந்த சம்பவம் சம்பவம் பூக்கடை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.