வேங்கைவயல் குடிநீரில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட விவகாரம்: 8 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை!

புதுக்கோட்டை: வேங்கைவயலில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக் கழிவு கலந்த விவகாரம் தொடர்பாக திருச்சி சிபிசிஐடி அலுவலகத்தில் எட்டு பேரிடம் இன்று விசாரணை நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், முத்துக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் ஆதிதிராவிடர் குடியிருப்புப் பகுதியில் உள்ள மக்கள் பயன்படுத்தும் நீர்த்தேக்கத் தொட்டியில் கடந்த டிசம்பர் மாதம் 26-ம் தேதி மனித கழிவுகள் கலக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக வெள்ளனூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு இதுவரை 85 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து நீர்த்தேக்க தொட்டியில் இருந்து சேகரிப்பட்ட மாதிரிகள் ஆய்வுக்காக சென்னை தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது.

இதற்கிடையில், விசாரணையை தீவிரப்படுத்தவும், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை விரைவாக அடையாளம் கண்டு கைது செய்யவும், வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து இறையூர் கிராமத்தில் சிபிசிஐடி தனிப்படை போலீசார் வீடு வீடாக சென்று ஆய்வு செய்து பொதுமக்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர்.

அதனடிப்படையில் ஊராட்சித் மன்ற தலைவர் முத்தையா, புதுக்கோட்டையில் பயிற்சி காவலராக பணியாற்றும் வேங்கைவையல் கிராமத்தைச் சேர்ந்த முரளி ராஜா சுதர்சன், முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட 8 பேரை இன்று நேரில் ஆஜராகுமாறு சிபிசிஐடி போலீசார் உத்தரவிட்டுள்ளனர். அதன்படி இன்று திருச்சி சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜரான 8 பேரிடமும், சிபிசிஐடி போலீசார் இன்று விசாரணை நடத்தினர்.

Related Stories: