நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்தில் சிக்னல் கட்டுப்பாட்டு அறை அமைக்கும் பணிகள் தீவிரம்

*2024 ல் கிராசிங் ரயில் நிலையமாக செயல்படும்

நாகர்கோவில்:  நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்தை கிராசிங் ரயில் நிலையமாக மாற்றும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. தற்போது சிக்னல் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கும் பணிகள் வேகமெடுத்துள்ளன.நாகர்கோவில் ஜங்ஷன் (கோட்டார்) ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ள சிறிய எப் பிரிவு ரயில் நிலையம், நாகர்கோவில் டவுன் ரயில் நிலையம் ஆகும். நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் திருவனந்தபுரம், கொச்சுவேலி, கொல்லம் மெமு ரயில், கோட்டயம் போன்ற பயணிகள் ரயில்கள் இங்கு நின்று செல்கின்றன. பின்னர் 2010ம் ஆண்டில் இருந்து திருநெல்வேலி - பிலாஸ்பூர், திருநெல்வேலி - ஹப்பா வாராந்திர ரயில்களும் டவுன் ரயில் நிலையம் வழியாக இயக்கப்பட்டன.

இது மட்டுமில்லாமல் திருநெல்வேலி - மும்பை, திருவனந்தபுரம் - சென்னை ஆகிய சிறப்பு ரயில்கள் நாகர்கோவில் டவுன் ரயில் நிலையம் வழியாக  இயக்கப்பட்டதுடன், திருச்சி - திருவனந்தபுரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலும், நாகர்கோவில் டவுன் ரயில் நிலையம் வழியாக இயக்கப்பட்டு வருகிறது.இந்த ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் இருந்தது. தண்டவாளமும், நடைமேடையும் ஒரே உயரத்தில் இருந்தன. நடைமேடையில் இருந்து இளைஞர்கள் கூட ரயிலில் ஏறமுடியாது.

வயதானவர்கள் மற்றும் மாற்றுதிறனாளிகள் ரயில் ஏறுவதில் பல்வேறு இன்னல்களை அனுபவித்தனர். குடிநீர், கழிப்பறை வசதி, பயணிகளுக்கு ஓய்வு அறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் இருந்தது.இந்த நிலையில் டவுன் ரயில் நிலையத்தில் ரூ.5 கோடியில் விரிவாக்க பணிகள் தொடங்கிய நிலையில், கன்னியாகுமரி - திருவனந்தபுரம் இரட்டை ரயில் பாதை பணிகளும் வேகமெடுத்தன. இதனால் டவுன் ரயில் நிலையத்தை கிராசிங் நிலையமாக மாற்றம் செய்யப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்காக விரிவாக்க பணிகளுக்காக கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு பிளாட்பாரம் மேம்பாடு, கூடுதல் பிளாட்பாரம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்தன.

அதன்படி தற்போது நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்தில் பிளாட்பாரம் 1, 2 என இரு  பிளாட்பாரங்கள் உள்ளன. பயணிகள் செல்வதற்காக நடை மேம்பாலமும் அமைக்கப்பட்டுள்ளது. பயணிகள் முன்பதிவு மையம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து முடிந்துள்ளன. இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து சென்னை - கொல்லம் இடையே இயக்கப்படும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில், டவுன் ரயில் நிலையம் வழியாக இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் டவுன் ரயில் நிலையத்துக்கு மாற்றப்பட்ட பின், அங்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதே போல்  சென்னை - குருவாயூர் இடையே தினமும் இயக்கப்படும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்களும் டவுன் ரயில் நிலையம் வழியாகவே இயக்கப்பட வாய்ப்பு உண்டு என கூறப்படுகிறது.

நாகர்கோவில் - திருவனந்தபுரம் ரயில் பாதையில், டவுன் ரயில் நிலையம் மிக முக்கியமான கிராசிங் நிலையமாக மாற உள்ளது. இதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. குறிப்பாக சிக்னல் கட்டுப்பாட்டு அறை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த கட்டுப்பாட்டு அறைக்கான கட்டுமான பணிகள் நிறைவு பெற்று, தற்போது சிக்னல் கட்டுப்பாட்டு கருவிகள் பொருத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இதற்கான மின் இணைப்புகள், கேபிள்கள் பதிக்கும் பணிகள் நடக்கின்றன. இந்த பணிகளும் இறுதி கட்டத்தை எட்டி உள்ளன. இந்த மாத இறுதிக்குள் சிக்னல் கட்டுப்பாட்டு அறை பணிகள் முடிவடையும் என கூறப்படுகிறது.

டவுன் ரயில் நிலையம் கிராசிங் நிலையமாக மாற்றப்பட்ட பின் பல்வேறு ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டு பயண நேரம் குறையும். இது மட்டுமில்லாமல் நாகர்கோவில் மற்றும் இரணியல் ரயில் நிலையங்களில் கிராசிங்கிற்காக ரயில்கள் அதிக நேரம் நிறுத்தி வைக்கப்படுவதும் தவிர்க்கப்படும். இன்னும் கூடுதல் ரயில்கள் இந்த ரயில் நிலையத்தில் நின்று செல்லும். திருவனந்தபுரத்தில் இருந்து சென்னைக்கு நாகர்கோவில் டவுன், திருநெல்வேலி, மதுரை, திருச்சி மார்க்கத்தில் புதிய ரயில் இயக்கப்பட வாய்ப்பு உண்டு என்றும் பயணிகள் சங்கத்தினர் கூறி உள்ளனர்.

சரக்கு குடோனை மாற்ற வேண்டும்

நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்துக்கு சரக்கு ரயிலில் வரும் அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் லாரிகள் மூலம் பள்ளிவிளையில் உள்ள ஒன்றிய அரசுக்கு சொந்த கிட்டங்கிக்கு எடுத்து வரப்படுகிறது. இதனால் தாமதம், போக்குவரத்து நெரிசல் போன்ற காரணங்களால் அரசுக்கு பண விரயம் ஏற்படுகிறது. டவுன் ரயில் நிலையம் கிராசிங் ரயில் நிலையமாக மாற்றப்படுவதால், சரக்கு ரயில்களை நிறுத்த வசதி ஏற்படுத்த வேண்டும். நாகர்கோவிலில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் உள்ள சரக்கு குடோனை பள்ளிவிளையில் உள்ள டவுன் நிலையத்துக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்று ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

கூடுதல் சாலை வசதி செய்ய வேண்டும்

நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்துக்கு தற்போது வெட்டூர்ணிமடம் சென்று அங்கிருந்து தான் செல்ல வேண்டும். இந்த சாலை மிகவும் மோசமாக உள்ளது. குறுகிய சாலையாகவும் இருப்பதால் வாகனங்கள் செல்வதில் சிரமம் உள்ளது. எனவே தற்போது நாகர்கோவில் - திருவனந்தபுரம் நான்கு வழிச்சாலை பணிகள் நடந்து வருகின்றன. இதில் புத்தேரி பகுதியில் இருந்து டவுன் ரயில் நிலையம் செல்ல புதிய சாலை வசதி ெசய்ய வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டிசம்பரில் பணிகள் முடிவடையும்

நாகர்கோவில் டவுன் ரயில் நிலைய மேம்பாட்டு பணிகள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், ரயில் ஆர்வலர்கள் பல்வேறு கேள்விகள் எழுப்பி இருந்தனர். இதற்கு பதிலளித்துள்ள அதிகாரிகள், தற்போதைக்கு பிளாட்பாரம் 1, 2 என இரு பிளாட்பாரங்கள் மட்டுமே இருக்கும். எதிர்கால திட்டங்கள் குறித்து இதுவரை முடிவு செய்யப்பட வில்லை. தற்போது நடந்து வரும் பணிகள் அனைத்தும் டிசம்பர் 31ம்தேதிக்குள் முடிக்கப்பட்டு, 2024 ஏப்ரலில் இருந்து கிராசிங் ரயில் நிலையமாக மாறும் என்றனர்.

Related Stories: