குமரி: குமரி மாவட்டத்தில் உள்ள பறக்கை நெல் கொள்முதல் நிலையத்திற்கு அறுவடை செய்யப்பட்ட நெல்லை கொண்டு சேர்க்க சாலை வசதிகளை சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது பறக்கை, சுசிந்திரம் உள்ளிட்ட பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் தீவிரமடைந்துள்ளன. ஆனால் அறுவடை செய்யப்பட்ட நெல்லை பறக்கை நெல்கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு செல்வதற்கு சாலை வசதிகள் இல்லாத நிலை உள்ளது.
கொண்டு செல்லும் நெல்லை சேமித்து வைக்கும் அளவிற்கு நெல்கொள்முதல் நிலையத்தில் போதிய இடவசதி இல்லை. எனவே உடனடியாக கொள்முதல் நிலையத்திற்கு நெல்கொண்டு செல்லும் வகையில் சாலையை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கும் விவசாயிகள் அரசு உத்தரவிட்டப்படி கொள்முதல் நிலையத்தை விரைவாக திறக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர். மதுரை மாவட்டம் மேலூர் அருகே நயத்தான்பட்டி பகுதிகளில் முல்லைபெரியாறு பாசன தண்ணீர் மூலம் சுமார் 5,000 ஏக்கரில் அறுவடைபணிகள் முடிந்துள்ளன. கடந்த 20 நாட்களாக விவசாயிகள்நெல்மணிகளை கொட்டிவைத்து காத்திருக்கும் அதிகாரிகள் நெல்கொள்முதலுக்கு வரவில்லை.
இதனால் கடந்த மூன்று நாட்களாக பெய்த மழையால் நெல்மணிகள் முளைத்து வீணாவதால் விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர். எனவே உடனடியாக நேரடி நெல்கொள்முதல் நிலையம் அமைத்திட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே அரசு விரைந்து நெல்மணிகளை கொள்முதல் செய்யாவிட்டால் நெல்மணிகள் முளைத்து வீணாகிவிடும் என்று தெரிவித்த விவசாயிகள் அதிகாரிகளின் மெத்தனத்தால் ஏக்கருக்கு ரூ.30,000 வரை நஷ்டம் ஏற்படுவதாகவும் கூறுகின்றனர்.