சென்னை: சென்னை உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதியில் நிலவிய மூடு பனியால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். சென்னையின் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை கடும் குளிருடன் பனிமூட்டம் நிலவியது. இதனால் அவதிக்குள்ளான வாகன ஓட்டிகள், முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி சாலையில் மெதுவாக சென்றனர். காலை 6 மணி வரை இதே நிலை தொடர்ந்ததால் நடைப்பயிற்சி மற்றும் அத்தியாவசிய பணிக்கு புறப்பட்டு செல்வோரும் பாதிக்கப்பட்டனர். இதேபோல் தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர், வண்டலூர் உள்ளிட்ட இடங்களிலும் பனிமூட்டம் நிலவியது. கட்டிடங்கள், சாலைகள் கண்ணுக்கு தெரியாத வகையில் பனி மூடியிருந்தது.