சென்னை: குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில், கூடுதல் குற்றப்பத்திரிகையில் உள்ள பிழைகள் திருத்தும் பணிகளை முடிக்க கால அவகாசம் வேண்டும் என்று சிபிஐ தரப்பில் சென்னை நீதிமன்றத்தில் கோரப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் புகையிலை பொருட்களுக்கு விற்பனை, கிடங்குகளில் வைப்பது உள்ளிட்டவைகளுக்கு தடை விதிக்கபட்டது. ஆனால், தடையை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் அளித்து குட்கா விற்கப்படுவதாகவும், இதனால் வரி ஏய்ப்பு நடைபெறுவதாகவும் கிடைத்த தகவலின் படி கடந்த 2016ம், ஆண்டு சென்னை செங்குன்றம் பகுதியில் மாதவராவ் என்பவருக்கு சொந்தமான கிடங்கில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதில் ஒரு டைரி பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த டைரியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை விற்பனை செய்ய தமிழக அமைச்சர்கள் மற்றும் ஒன்றிய, மாநில அரசு உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த சர்ச்சையில் அப்போதைய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், முன்னாள் வணிக வரித்துறை அமைச்சர் பி.வி.ரமணா, முன்னாள் தமிழக போலீஸ் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை முன்னாள் போலீஸ் ஆணையர் ஜார்ஜ், டிகே.ராஜேந்திரன் உள்ளிட்ட ஒன்றிய, மாநில அரசு உயரதிகாரிகள், போலீஸ் உயரதிகாரிகளின் பெயர்களும் அடிபட்டது. இந்நிலையில் இந்த குட்கா ஊழல் தொடர்பாக திமுக தரப்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது.
இதையடுத்து, வழக்கு பதிவு செய்த சிபிஐ கிடங்கு உரிமையாளர்கள் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில்முருகன், ஒன்றிய கலால்துறை அதிகாரி நவநீதகிருஷ்ண பாண்டியன், சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் ஆகிய 6 பேரை கடந்த 2016 ஆண்டு கைது செய்தது. இந்நிலையில் முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கர், முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை முன்னாள் போலீஸ் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட ஒன்றிய, மாநில அரசு அதிகரிகள் 11 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு ஜூலை 19ம் தேதி அனுமதி வழங்கியது. 11 பேருக்கு எதிராக சிபிஐ தரப்பில் கூடுதல் குற்றப்பத்திரிகை கடந்த நவம்பர் மாதம் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அந்த கூடுதல் குற்றப்பத்திரிகையில் பல்வேறு தவறுகள் இருப்பதால் அதனை திருத்தம் செய்தும் வழக்கில் உள்ள சாட்சிகள் குறித்த விபரங்கள் மற்றும் அவர்களின் வாக்கு மூலம் தொடர்பான குறித்த விபரங்களை இணைத்தும், குற்றம்சாட்டபட்டவர்களுக்கு எதிரான விசாரணை அனுமதி தொடர்பான விபரங்களை இணைத்தும், தவறுகளை திருத்தம் செய்து முழுமையாக தாக்கல் செய்ய விசாரணை அதிகாரிக்கு சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு நேற்று சென்னை சிபிஐ நீதிமன்ற நீதிபதி மலர் வாலன்டினா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில், பிழைகளை திருத்திய குற்றப்பத்திரிகை இன்னும் தயாராகவில்லை. எனவே கூடுதல் கால அவகாசம் அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கபட்டது. இதையடுத்து வழக்கு விசாரணையை பிப்ரவரி 17ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.