வாயில் வடை சுடும் ஒன்றிய அரசு தேர்தலின் போது மட்டும் மக்களை தேடும் அதிமுக: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

மதுரை: தேர்தலின்போது மட்டும் மக்களை அதிமுக தேடும். ஒன்றிய அரசு வாயில் வடை சுடுகிறது’ என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். மதுரை, பாண்டிகோவில் கலைஞர் அரங்கில் மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த 70 ஆயிரம் பெண்களுக்கு ரூ.173 கோடியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று மாலை நடந்தது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது: கிட்டத்தட்ட 75 சதவீத தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நாங்கள் திட்டங்களை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறோம்.

ஆனால் எதிர்கட்சியினர் எங்கள் மீது அவதூறு பரப்புகின்றனர். அதிமுக ஆட்சியில் ஒன்றுமே செய்யவில்லை. லட்சக்கணக்கான கோடி கடனையும், அடிமை அரசு என்ற பட்டத்தையும் காலியான கஜானா என்ற அவப்பெயரையும் வைத்து விட்டு சென்றனர். தடுமாறிக் கிடந்த தமிழ்நாடு அரசை தலை நிமிரச்செய்தவர் முதல்வர் மு.க.ஸ்டாலின். எல்ஐசி பணம் ஒரே இரவில் காணவில்லை.  வாயில் வடை சுடும் ஒன்றிய அரசு, எய்ம்ஸ்க்கு துளி நிதி கூட பட்ஜெட்டில்  ஒதுக்கவில்லை. காஸ் சிலிண்டருக்கு மானியம் வழங்கவில்லை. தேர்தலின் போது  மட்டும் மக்களை அதிமுக தேடும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: