செல்போன் வழிப்பறியின்போது ஜிம் மாஸ்டரை கத்தியால் குத்திய முக்கிய குற்றவாளி சிக்கினார்

பெரம்பூர்: சென்னை  வியாசர்பாடி மூர்த்திங்கர் நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் கவுதம் (27). இவர், ஜிம் மாஸ்டர். கடந்த 17ம்தேதி இரவு வேலை முடிந்து ஸ்டீபன்சன் சாலை வழியாக வரும்போது, 2 பேர் கவுதமை வழிமடக்கி செல்போனை பறித்தனர். அப்போது, அவர் தர மறுக்கவே ஆத்திரமடைந்து, கவுதமை கத்தியால் வயிற்றில் குத்தி விட்டு, செல்போனை எடுத்துக் கொண்டு தப்பினர். இதில், பலத்த காயமடைந்த கவுதமை அக்கம் பக்கத்தினர், மீட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து வியாசர்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து ஆகாஷ் (19) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ஆகாஷ் (எ) இன்பகுமார் (21) என்பவரை தேடி வந்தனர். இந்நிலையில், வியாசர்பாடி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் வானமாமலை தலைமையிலான போலீசார், நேற்று வியாசர்பாடி கூட்செட் ரோடு பகுதியில் இன்பகுமார் இருப்பதை அறிந்து அங்கு சென்றனர். அவர் போலீசாரிடமிருந்து தப்பிக்க சுவர் மீது ஏறி குதித்து ஓடும்போது, கீழே விழுந்து வலது கை முறிந்தது. உடனடியாக அவரை மீட்ட போலீசார் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று கட்டு போட்டனர். பிறகு அவர் மீது வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: