குடும்ப தகராறில் விபரீதம் விஷம் குடித்தார் பெண்

புழல்: செங்குன்றம் அருகே எடப்பாளையம், உப்பரபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன். தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி தாட்சாயிணி (38). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக கணவன்-மனைவி இடையே குடும்பத் தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த தாட்சாயிணி பூச்சிமருந்தை குடித்து, மயங்கி விழுந்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, செங்குன்றத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப்பின், மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தாட்சாயிணியை பரிசோதித்த டாக்டர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்த சோழவரம் போலீசார் விரைந்து வந்து, சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கணவர் மற்றும் உறவினர்களிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Related Stories: