340 பேர் மீது காவல் நிலையத்தில் புகார்; தெரு, சாலைகளின் பெயர் பலகைகளில் போஸ்டர் ஒட்டினால் கடும் நடவடிக்கை: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

சென்னை: தெரு, சாலைகளின் பெயர் பலகைகளில் போஸ்டர் ஒட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது. இது தொடர்பாக 340 பேர் மீது காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தூய்மையை பராமரிக்கும் வகையில் மாநகராட்சியின் சார்பில் திடக்கழிவுகளை அகற்றுதல், சாலை மையத்தடுப்புகளில் செடிகள் நடுதல், பாலங்களில் செங்குத்துப் பூங்காக்கள் அமைத்தல் போன்ற அழகுப்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இருப்பினும் மாநகரின் பல்வேறு பகுதிகளில் அரசு, மாநகராட்சி கட்டிடங்கள், பேருந்து பயணிகள் நிழற்குடைகள், பாலங்கள் உட்பட பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு மாநகரின் அழகினை சீர்குலைக்கும் வகையில் உள்ளன. தமிழ்நாடு திறந்தவெளி இடங்கள் பாதுகாப்பு சட்டம் 1959ன் படி நகரின் பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டவோ, அனுமதியின்றி விளம்பரப் பதாகைகளை அமைக்கவோ கூடாது. அதன் அடிப்படையில், சென்னை மாநகராட்சியின் சார்பில் பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் மாநகராட்சி பணியாளர்களால் அகற்றப்பட்டு, தொடர்புடைய நபர்களின் மீது அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

மேலும், சுவரொட்டிகள் ஒட்டும் நபர்களின் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்து தகுந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த மாதம் 11ம் தேதி முதல் பிப்ரவரி 1ம் தேதி வரை சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் சுவரொட்டி ஒட்டிய நபர்களின் மீது ரூ.1,36,000 அபராதம் விதிக்கப்பட்டு, 340 நபர்களின் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னை மாநகரை சர்வதேச நகரங்களுக்கு இணையாக கட்டமைக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் பல்வேறு முன்மாதிரியான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

எனவே, சென்னை மாநகரின் பொது இடங்கள் மற்றும் மாநகராட்சி, அரசின் சார்பில் வைக்கப்பட்டுள்ள தெரு, சாலைகளின் பெயர் பலகைகள், இதர அறிவிப்பு பலகைகளில் சுவரொட்டிகள் ஒட்டும் நபர்களின் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: