நேரு விளையாட்டு அரங்கில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு: விளையாட்டு வீரர்களுடன் கலந்துரையாடல்

சென்னை: நேரு விளையாட்டு அரங்கை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று ஆய்வு மேற்கொண்டு விளையாட்டு வீரர்களுடன் கலந்துரையாடினார். சென்னை, நேரு விளையாட்டு அரங்கில்  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று ஆய்வு மேற்கொண்டார். மேலும், விளையாட்டு மைதானத்தில் பயிற்சி மேற்கொண்ட வீரர், வீராங்கனைகள், செவித்திறன் குன்றிய வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களிடம் மைதானத்தில் உள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, குத்துச்சண்டை அரங்கினை பார்வையிட்டு ‌ மாணவர்களுடன் கலந்துரையாடி கூடுதல் வசதிகள் மற்றும் உபகரணங்கள் தேவை குறித்து கேட்டறிந்தார்.

மேலும், உடற்பயிற்சி கூடம், மாணவ, மாணவியர் தங்கும் விடுதி மற்றும் நடைபெற்று வருகின்ற பராமரிப்பு பணிகள் ஆகியவற்றை பார்வையிட்டு கூடுதலாக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் தொடர்பாக ஆய்வு செய்து பழைய கட்டமைப்புகளை நவீன வடிவமைப்புடன் சீரமைப்பு செய்திட அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். அதேபோல, கீழ் தளம் மற்றும் மேல்தளத்தில் உள்ள விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் கழிப்பிட வசதிகளை ஆய்வு செய்து முறையாக பராமரித்திடவும் கேட்டுக்கொண்டார். இந்த ஆய்வின் போது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Stories: