பெங்கால்மட்டம், மெரிலேண்டு பகுதிகளில் காட்டு மாடுகள் நடமாட்டம் அதிகரிப்பு: தோட்ட தொழிலாளர்கள் அவதி

மஞ்சூர்: பெங்கால்மட்டம், மெரிலேண்டு பகுதிகளில் காட்டுமாடுகள் நடமாட்டத்தால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அவதிகுள்ளாகி வருகின்றனர். நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே மெரிலேண்டு, மைனலாமட்டம், பெங்கால்மட்டம், கிட்டட்டிமட்டம், தேனாடு, கோத்திபென், சாம்ராஜ் எஸ்டேட் மற்றும் ராக்லேண்டு உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வரும் இந்த கிராமங்களை சுற்றிலும் தேயிலை தோட்டங்களுடன் அடர்ந்த காடுகள் சூழ்ந்துள்ளது.

இந்நிலையில், சமீபகாலமாக இப்பகுதிகளில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, காட்டு மாடுகள் அதிகளவில் நடமாடி வருகின்றன. மேற்படி, கிராமங்களில் ஏராளமான விவசாயிகள் உருளைகிழங்கு, கேரட், பீட்ரூட், பட்டாணி, அவரை, பீன்ஸ், முட்டைகோஸ் உள்ளிட்ட பல வகையிலான மலைகாய்கறிகளை பயிரிட்டு விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், விளை நிலங்களில் காட்டு மாடுகள் கூட்டம், கூட்டமாக புகுந்து பயிர்களை சூறையாடுவதுடன் தோட்டங்களையும் கால்களால் மிதித்து நாசம் செய்து வருகின்றன. இவற்றின் தொல்லையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பலர் மலைகாய்கறி விவசாயம் மேற்கொள்வதை விட்டு விட்டனர்.

மேலும், இப்பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்களில் கூட்டமாக மேய்ச்சலில் ஈடுபடும் காட்டு மாடுளால் தேயிலை தோட்டங்களுக்கு இலை பறிக்க செல்லும் தொழிலாளர்களும் பணிக்கு செல்ல தயக்கம் காட்டி வருகின்றனர். நேற்று முன் தினம் மஞ்சூர் அருகே சாம்ராஜ் எஸ்டேட் அருகே உள்ள தேயிலை தோட்டத்தில் தொழிலாளர் சிலர் தேயிலை பறித்து கொண்டிருந்தனர். அப்போது, 10க்கும் மேற்பட்ட காட்டுமாடுகள் கூட்டமாக தேயிலை தோட்டத்திற்குள் புகுந்துள்ளது.

இதை கண்ட பெண் தொழிலாளர்கள் தேயிலை பறிப்பதை கைவிட்டு தோட்டத்தில் இருந்து அவசர, அவசரமாக வெளியேறினார்கள். இதைத்தொடர்ந்து, சுமார் 2மணி நேர மேய்ச்சலுக்கு பிறகே காட்டுமாடுகள் அங்கிருந்து சென்றுள்ளது.

 இப்பகுதிகளில் காட்டுமாடுகளின் நடமாட்டம் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் தேயிலை தோட்டங்களுக்கு சரிவர பணிக்கு செல்ல முடியாத நிலையில் இவற்றின் நடமாட்டத்தை முற்றிலுமாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிலாளர்கள் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: