அசுர வேகத்தில் சென்ற அரசு பஸ்: பொதுமக்கள் பீதி

அண்ணாநகர்: கோயம்பேடு மார்க்கெட் அருகே நேற்று காலை அரசு பேருந்து அதிவேகமாக சென்றது. இதனால், பீதி அடைந்த  பொதுமக்கள் டிரைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை கோயம்பேடு மார்க்கெட் அருகே நேற்று காலை 11.30 மணி அளவில், கடலூரில் இருந்து கோயம்பேடு பேருந்து நிலையம் நோக்கி  அரசு பஸ் ஒன்று படுவேகமாக வந்தது. இதை பார்த்து, அவ்வழியாக சென்ற பொதுமக்கள் மிகுந்த பீதி அடைந்தனர். இதுபற்றி பஸ் டிரைவரிடம் கேட்டதற்கு, ‘‘அப்படித்தான் செய்வோம்’’  என்று அலட்சியமாக  பேசியதாக தெரிகிறது.

எனவே, ஆத்திரம் அடைந்த வியாபாரிகள், பொதுமக்கள் டிரைவர், கண்டக்டரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர். இதன்பின்னர் அரசு பஸ் டிரைவரை சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனர். அதன்பிறகு வாகனங்கள் சென்றன.

இதுகுறித்து, பொதுமக்கள் கூறும்போது, ‘‘கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் தினமும் காலை, இரவு நேரங்களில் அரசு பேருந்துகள் அதிவேகத்தில் செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மார்க்கெட் பகுதியில் அதிக கூட்டம் கூடும் பகுதிகளில் அரசு பேருந்துகளை மெதுவாக இயக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அறிவுறுத்தவேண்டும்’’ என்றனர்.

Related Stories: