சென்னை: சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும், 7 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், உத்தரவின்பேரில் குற்றவாளிகளை தீவிரமாக கண்காணித்து குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த 1.1.2023 முதல் 3.2.2023 வரை சென்னையில் கொலை, கொலை முயற்சி மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றங்களில் ஈடுபட்ட 10 குற்றவாளிகள், திருட்டு, சங்கிலி பறிப்பு, வழிப்பறி மற்றும் பணமோசடி குற்றங்களில் ஈடுபட்ட 13 குற்றவாளிகள், சைபர் குற்றங்களில் ஈடுபட்ட ஒரு குற்றவாளி, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்த 8 குற்றவாளிகள் என மொத்தம் 32 குற்றவாளிகள் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கடந்த 28.1.2023 முதல் 3.2.2023 வரையிலான ஒரு வாரத்தில் 7 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், ஒரு வாரத்தில் நன்னடத்தை பிணை பத்திரத்தை மீறி மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபட்ட 8 குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்பட்டனர்.