சிறப்பான முறையில் கடமையாற்றி புதிய கலெக்டர்கள் அரசுக்கு நற்பெயரை தேடித்தர வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை

சென்னை: சிறப்பான முறையில் கடமையாற்றி, அரசுக்கு நற்பெயரை தேடித்தாருங்கள் என்று புதிய மாவட்ட கலெக்டர்களிடம் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி, ராணிப்பேட்டை, தேனி, விழுப்புரம், மயிலாடுதுறை, கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, விருதுநகர், பெரம்பலூர், திருவாரூர், கோவை, தென்காசி ஆகிய மாவட்ட கலெக்டர்களுடன் உரையாடினார். அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தமிழ்நாட்டில் ஆட்சி பொறுப்பேற்று இந்த குறுகிய காலத்திற்குள்ளாக நம்முடைய அரசு  சிறப்பான பெயரை பெற்றிருக்கிறது, இதற்கு எந்தவித மறுப்பும் யாரும் சொல்ல முடியாது.  

அந்த பெயரை பெறுவதற்கு காரணமாக இருந்தவர்கள், ஏதோ தனிப்பட்ட முதலமைச்சரோ, தனிப்பட்ட தலைமை செயலாளரோ, தனிப்பட்ட அரசு அதிகாரிகளோ மட்டும் அல்ல, உங்களை போன்ற அதிகாரிகளும், அரசு அலுவலர்களும் தான் அதற்கு முழுமையான காரணமாக இருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது. இப்போது புதிதாக ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கள ஆய்வு பணியை மேற்கொண்டேன். அங்கு பணி மிக சிறப்பான வகையில், நான் திருப்தி அடையக்கூடிய வகையில், நாங்கள் மட்டுமல்ல அந்த செய்தியை கேள்விப்பட்ட அனைவருமே பாராட்டக்கூடிய அளவிற்கு அந்த பணிகள் நடந்திருக்கிறது. இது தொடரப் போகிறது.

அப்படிப்பட்ட பயணத்தை மேற்கொள்கிறபோது, புதிதாக பொறுப்பேற்றிருக்கக்கூடிய நீங்கள் மாவட்டத்தில் பொறுப்பேற்றவுடன், என்னென்ன பணி நடைபெறாமல் இருக்கிறது. என்னென்ன பணி எந்த நிலையில் இருக்கிறது. எந்த எந்த பணிகள் இன்னும் தொடங்க இயலாத நிலையில் இருக்கிறது. அதற்கு என்னென்ன இடையூறுகள் இருக்கின்றன. நீதிமன்றங்களில் என்னென்ன வழக்கு இருக்கிறது என்பதை பற்றியெல்லாம் நீங்கள் கலந்தாய்வு நடத்தி அதையெல்லாம் விரைவாக, அந்த பணிகளை நிறைவேற்றக்கூடிய காரியத்தில் ஈடுபட வேண்டும். மிக விரைவில் நீங்கள் பொறுப்பேற்க கூடிய மாவட்டத்துக்கு நாங்கள் ஆய்விற்கு வருகிறபோது அது உங்களால் நிறைவேற்றப்பட்டிருக்கிறது, அது உங்களால் சரிசெய்யப்பட்டிருக்கிறது என்ற செய்தியை நீங்கள் சொல்லக்கூடிய அளவிற்கு,  உங்களுடைய கடமையை நிறைவேற்றி தருவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

மகாத்மா காந்தி ‘களத்திற்கு செல்’ என்று சொன்னதுபோல, அண்ணா ‘மக்களிடத்தில் செல்’ என்று அடிக்கடி சொல்வார்கள், அதைப்போல நீங்கள் மக்கள் நல பணிகளை செயல்படுத்தி மக்களை கவரக்கூடிய வகையில், ஆங்காங்கு பணியாற்றக்கூடிய அதிகாரிகளை  அவர்களுக்கு உரிய பணிகளை விரைந்து முடித்திட உத்தரவிட வேண்டும். சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டக்கூடிய வகையில் உங்கள் மாவட்டங்களில் அதை பேணி பாதுகாக்க வேண்டும். எந்தவித அரசியல் மாச்சரியங்களுக்கு நீங்கள் இடம் கொடுக்காமல், அரசியல் பார்க்காமல், மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற அந்த உணர்வோடு மட்டுமே உங்களது பணி அமைய வேண்டும்.

விரைவில், மார்ச் மாதம் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்போகிறோம். அப்படி தாக்கல் செய்யப்படுகிற நேரத்தில், என்னென்ன புதிய திட்டங்களை நாம் அறிவிக்க இருக்கிறோம். ஏற்கனவே அறிவித்திருக்கக்கூடிய திட்டங்கள் எந்த நிலையில் இருக்கிறது என்பதையும் அந்த நிதிநிலை அறிக்கையில் பேசப்படக்கூடிய ஒரு சூழ்நிலை வரும். அதையும் மனதில் வைத்துக்கொண்டு அதற்கும் நீங்கள் தகுந்த பதிலை நம்முடைய அரசுக்கு தொடர்ந்து வழங்கிட வேண்டும். புதிதாக பொறுப்பேற்கவுள்ள நீங்கள், சிறப்பான முறையில் கடமையாற்றி இந்த அரசுக்கு ஒரு நற்பெயரை தேடித்தாருங்கள் என்றார். அப்போது தலைமை செயலாளர் இறையன்பு, நிதித்துறை செயலாளர் முருகானந்தம், பொதுத்துறை செயலாளர் ஜகந்நாதன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: