சென்னை: மறைந்த பாடகி வாணி ஜெயராமின் மறைவுக்கு செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; இன்று (04-02-2023) காலத்தால் அழியாத பல திரைப்படப் பாடல்களை பாடிய பின்னணி பாடகி திருமதி வாணி ஜெயராம் அவர்கள் காலமான செய்தி அறிந்து மிகவும் மன வருத்தம் அடைந்தேன். திருமதி வாணி ஜெயராம் அவர்கள் தமிழ் மட்டும் அல்லாது தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய பல மொழிகளில் 10,000-க்கு மேற்பட்ட பாடல்களை பாடி தனி முத்திரை பதித்தவராவர். இந்த ஆண்டு, ஒன்றிய அரசால் வழங்கப்படும் உயரிய விருதான பத்ம பூசண் விருது திருமதி வாணி அவர்களுக்கு அறிவிக்கப்பட்டு, கௌரவபடுத்தப்பட்டது.