உதகை: உதகை அருகே மசினகுடி பகுதியில் 40 ஆண்டுகளுக்கு பிறகு பூத்து குலுங்கும் மூங்கிலரிசி பொதுமக்கள் வியப்புடன் பார்த்து ரசித்து வருகின்றனர். 67% சதவீத வனப்பகுதியை கொண்ட நீலகிரி மாவட்டத்தில் மாயார், மசினகுடி, சீகூர், ஆனைக்காட்டி ஆறுகளின் இரு புறங்களிலும் ஆயிரக்கணக்கான மூங்கில்கள் உள்ளன. இவை காட்டு யானைகளுக்கு பிடித்த உணவாக இருப்பதால் ஆயிரக்கணக்கான யானைகள் இடம்பெயர்ந்து வந்து செல்கின்றன.
அத்துடன் மான்கள், காட்டு எருமைகள், குரங்குகளுக்கும் உணவாக இருந்து வருகிறது. தற்போது மசினகுடி, மாணவல்லா, வாழை தோட்டம் பகுதிகளில் ஆயிரக்கணக்கில் மூங்கில் மரங்கள் பூத்து குலுங்குவதை மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்துச் செல்கின்றனர். ஒரு பக்கம் பசுமையாக பூத்துக்குலுங்கும் மூங்கில் மரங்கள் மறுபுறம் விரைவில் காய்ந்து மூங்கிலரிசியை உதிர்க்க தொடங்கியுள்ளன.
உதகையில் வன பரப்பளவு குறைந்து கட்டடங்கள் பெருகி வருவதால் ஆங்காங்கே வறட்சி நிலவுவதே மூங்கில் மரங்கள் அருகி வர காரணம் என சொல்லப்படுகிறது. யானைகளின் முக்கிய உணவான மூங்கில்கள் அழிந்து வருவது வனத்துறையினர் மட்டுமின்றி உள்ளூர் மக்களையும் கவலை அடைய செய்துள்ளது. மூங்கில் மரங்கள் அழிந்துவருவது காட்டு யானைகள் உணவைத்தேடி விவசாய நிலங்களுக்கும், குடியிருப்பு பகுதிகளுக்கும் வருவது மேலும் அதிகரிக்கும் என்ற அச்சம் உருவாகியுள்ளது.