புதுடெல்லி: புதிதாக உருவாகி வரும் மாறுபாடுகளுக்கு கோவாக்ஸின் பூஸ்டர் டோஸ் பாதுகாப்பானது என்று ஒன்றிய அரசு தெரிவித்து உள்ளது. கொரோனா தொற்று குறித்து மக்களவையில் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் அளித்த எழுத்துப்பூர்வ பதில் விவரம் வருமாறு: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) கொரோனா தடுப்பூசிகளின் செயல்திறன், பக்கவிளைவுகள் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டுள்ளன. 2021 மே மாதம் மற்றும் ஜூலை இடையே இந்த ஆய்வு மேற்கொள்ளப்படடது. இதில் தடுப்பூசி செயல்திறன் கோவிஷீல்டில் 85 சதவீதமாகவும், கோவாக்சினில் 71 சதவீதமாகவும் கண்டறியப்பட்டது. அதே சமயம் கொரோனா மாறுபாடுகளுக்கு இரண்டு தடுப்பூசிகளின் திறனும் ஒன்றாக இருந்தது.