ஒப்பந்த செவிலியர்களுக்கு நிரந்தரப்பணி உள்பட 787 பேருக்கு பணி நியமன ஆணைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: ஒப்பந்த செவிலியர்களுக்கு நிரந்தர பணி, இளநிலை உதவியாளர்களுக்கான பணி உள்ளிட்ட 787 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். சென்னை, தலைமைச்செயலகத்தில், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநரகத்தின் கீழ் இயங்கும் அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள பணியிடங்களுக்கு 570 ஒப்பந்த செவிலியர்களுக்கு கலந்தாய்வு முடிந்து நிரந்தர பணி ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக நேற்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் 5 ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

அதேபோல், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநரகத்திற்கு 92 இருட்டறை உதவியாளர்கள் மற்றும் மருத்துவக் கல்வி இயக்குநரகத்திற்கு 85 இருட்டறை உதவியாளர்கள், என 177 இருட்டறை உதவியாளர்கள் காலிப் பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 5 இருட்டறை உதவியாளர்களுக்கு முதல்வர் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

இதேபோல், உணவு பாதுகாப்பு துறையின் கட்டுப்பாட்டில் சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி, சேலம், தஞ்சாவூர் ஆகிய 6 இடங்களில் உணவு பகுப்பாய்வகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த உணவு பகுப்பாய்வகங்களில் காலியாகவுள்ள 19 ஆய்வக நுட்புநர் நிலை பணியிடங்களுக்கு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 3 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் வழங்கினார். இதனை தொடர்ந்து, 21 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகள்பொது சுகா தாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்குரகம் மற்றும் மருத்துவக் கல்வி இயக்குநரகத்தில் பணிபுரிந்து பணிக்காலத்தில் காலமான 21 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 4 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் செந்தில்குமார், மருத்துவத் தேர்வு வாரியத்தலைவர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்குநர் செல்வவிநாயம், மருத்துவக் கல்வி இயக்குநர் சாந்திமலர், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் ஹரிசுந்தரி, உணவுப் பாதுகாப்பு கூடுதல் ஆணையர் தேவபார்த்தசாரதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: