புதுடெல்லி: ரயில் டிக்கெட்டுகளில் முதியோருக்கு 50 சதவீத மானிய சலுகை வழங்கப்பட்டு வந்தது. கொரோனா பாதிப்பை தொடர்ந்து கடந்த 2020ல் இந்த சலுகை நிறுத்தப்பட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்ற நிலைக்குழு சமர்பித்த அறிக்கையில், இரண்டாம் வகுப்பு மற்றும் ஏசி 3ம் வகுப்புகளில் முதியோர் மானிய சலுகையை மீண்டும் கொண்டு வர பரிந்துரைத்தது. இந்நிலையில், இந்த பரிந்துரையை ஒன்றிய அரசு ஏற்றுக் கொண்டுள்ளதா என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்பி பினோய் விஸ்வம் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக கேள்வி கேட்டிருந்தார். அதற்கு ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அளித்த பதிலில், ‘கடந்த 2019-20ம் ஆண்டில் பயணிகள் டிக்கெட்டுக்கு ரூ.59,837 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. இப்போது, ஊனமுற்றவர்கள், மாணவர்கள், நோயாளிகள் என பல்வேறு தரப்பினருக்கும் மானிய சலுகை தரப்படுகிறது’ என கூறி உள்ளார். ஆனால், 60 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கு வழங்கப்பட்ட முந்தைய தள்ளுபடியை மீண்டும் கொண்டு வர ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதா என்பதை அவர் தெளிவுபடுத்தவில்லை.