மாமா இறந்ததால் விரக்தி லாரி டிரைவர் தீக்குளித்து தற்கொலை: போலீசார் விசாரணை

புழல்: மாமா இறந்ததால் விரக்தியடைந்த வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக, போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். செங்குன்றம் அடுத்த நல்லூர் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் கன்னியப்பன் (33). திருமணம் ஆகாத இவர், லாரி டிரைவராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், இவரது அக்கா கணவர் சில மாதங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் இறந்துள்ளார். மேலும், அவரது 10 வயது மகனுக்கும் உடல் நலம் சரியில்லாததால், எழும்பூர் குழந்தைகள் நல அரசு மருத்துவமனையில்  சேர்த்துள்ளனர்.

இதனால், கடந்த சில நாட்களாக கன்னியப்பன் மனமுடைந்து காணப்பட்டார். இந்நிலையில், நேற்று காலை தனது வீட்டில், தனது உடலில்  பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். உடல் முழுவதும் தீ பரவிய நிலையில் அலறி துடித்தார். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்ட கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக அவர் உயிரிழந்தார். தகவலறிந்த சோழவரம் போலீசார் அங்கு விரைந்து, சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அதே  மருத்துவமனைக்கு, அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக, வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். 

Related Stories: