கோயம்பேட்டில் உள்ள பிரபல தியேட்டரில் ஆண் சடலம் மீட்பு: போலீசார் விசாரணை

அண்ணாநகர்: கோயம்பேட்டில் உள்ள பிரபல தியேட்டரில் ஆண் சடலம் மீட்கப்பட்டது. இது தொடர்பாக, போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கின் தண்ணீர் தொட்டியில் இருந்து நேற்று மதியம் கடும்  துர்நாற்றம் வீசியது. இதையடுத்து, ஊழியர்கள் தொட்டியின் மூடியை திறந்து பார்த்தபோது, அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று மிதப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்த கோயம்பேடு போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து,  சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அதில் சடலமாக கிடந்தவர் பூந்தமல்லி, ஆஞ்சநேயர் கோயில் தெருவை சேர்ந்த வெங்கடேச பெருமாள் (42) என்பதும், குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர் என்பதும், திருமணம் ஆகாத இவர் தியேட்டரில் தங்கியவாறு, ஒப்பந்த அடிப்படையில் பிளம்பர் மற்றும் கார்பெண்டராக வேலை செய்து வந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக, போலீசார், வழக்கு பதிந்து தண்ணீர் தொட்டியில் இவர் தவறி விழுந்து உயிரிழந்தாரா, அல்லது யாரேனும் இவரை கொலை செய்து, சடலத்தை தண்ணீர் தொட்டியில் வீசி சென்றார்களா, என பல கோணங்களில் விசாரிக்கின்றனர்.

Related Stories: