ஊட்டி: ஊட்டியில் உள்ள பைன் பாரஸ்ட் இயற்கை அழகை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். நீலகிரி மாவட்டம் சுற்றுலா தலங்கள் நிறைந்த பகுதி என்பதால் நாள் தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பூங்காக்கள், கேளிக்கை பூங்காக்கள் போன்ற சுற்றுலா தலங்களுக்கு செல்வதை காட்டிலும் இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளுக்கு செல்ல அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதனால், நீலகிரி மாவட்ட வனத்துறையினர் பல்வேறு பகுதிகளிலும் தற்போது சூழல் சுற்றுலா ஏற்படுத்தியுள்ளனர். ஊட்டி அருகேயுள்ள பைக்காரா, சூட்டிங்மட்டம், பைன் பாரஸ்ட், அவலாஞ்சி, முதுமலை மற்றும் கேர்ன்ஹில் போன்ற பகுதிகளில் சூழல் சுற்றுலா ஏற்படுத்தியுள்ளனர். இதில், கர்நாடகம் மற்றும் கேரள மாநிலத்தில் இருந்து ஊட்டி வரும் வழித்தடத்தில் பைன் பாரஸ்ட் அமைந்துள்ளது. இந்த பைன் பாரஸ்ட் வனப்பகுதியை ஒட்டியே காமராஜ் சாகர் அணையும் உள்ளது.
இதனால், இவ்விரு மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் இப்பகுதிக்கு செல்கின்றனர். தற்போது, மழை குறைந்து பகல் நேரங்களில் ரம்மியமான காலநிலை நிலவுவதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் பைன் பாரஸ்ட் பகுதிக்கு செல்கின்றனர்.