570 ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நியமன ஆணை: தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.  570 ஒப்பந்த செவிலியர்களுக்கு நிரந்தரப் பணி ஆணை, 177 இருட்டறை உதவியாளர்கள், 19 ஆய்வக நுட்புநர்கள்  மற்றும் கருணை அடிப்படையில் 21 நபர்களுக்கு இளநிலை உதவியாளர்களுக்கான பணி நியமன ஆணைகள் என மொத்தம் 787 நபர்களுக்கு பணிநியமன ஆணைகள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  இன்று தலைமைச் செயலகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் 570 ஒப்பந்த செவிலியர்களுக்கு நிரந்தரப் பணி ஆணைகள், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் 177 இருட்டறை உதவியாளர்கள் மற்றும் 19 ஆய்வக நுட்புநர் நிலை-II பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகள், இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கு கருணை அடிப்படையில் 21 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள், என மொத்தம் 787 நபர்களுக்கு  பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக  5 ஒப்பந்த செவிலியர்கள், 5 இருட்டறை உதவியாளர்கள், 3 ஆய்வக நுட்புநர் நிலை-II  மற்றும் 4 இளநிலை உதவியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

570 ஒப்பந்த செவிலியர்களுக்கு நிரந்தரப் பணி ஆணைகள்:

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 2015 முதல் தற்போது வரை 15,409 செவிலியர்கள் மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தால் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்படும் செவிலியர்களின் பணியானது குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் ஒப்பந்தப் பணி முடிந்த பின்னர், நிரந்தர காலிப் பணியிடத்தில் வரிசைப்படி நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி தற்போது, மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநரகத்தின் கீழ் இயங்கும் அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள பணியிடங்களுக்கு 570 ஒப்பந்த செவிலியர்களுக்கு கலந்தாய்வு முடிந்து நிரந்தர பணி ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 5 ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.   

177 இருட்டறை உதவியாளர் பணியிடங்களுக்கு பணிநியமன ஆணைகள்

மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநரகத்திற்கு 92 இருட்டறை உதவியாளர்கள் மற்றும் மருத்துவக் கல்வி இயக்குநரகத்திற்கு 85 இருட்டறை உதவியாளர்கள், என 177 இருட்டறை உதவியாளர்கள் காலிப் பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 5 இருட்டறை உதவியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.   

19 ஆய்வக நுட்புநர் நிலை-II பணியிடங்களுக்கு பணிநியமன ஆணைகள்:

உணவு பாதுகாப்பு துறையின் கட்டுப்பாட்டில் சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி, சேலம், தஞ்சாவூர் ஆகிய 6  இடங்களில்  உணவு பகுப்பாய்வகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த உணவு பகுப்பாய்வகங்களில் காலியாகவுள்ள 19 ஆய்வக நுட்புநர் நிலை-II பணியிடங்களுக்கு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 3 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

21 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகள்:

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்குரகம் மற்றும் மருத்துவக் கல்வி இயக்குநரகத்தில் பணிபுரிந்து பணிக்காலத்தில் காலமான 21 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 4  நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் ப. செந்தில்குமார், இ.ஆ.ப., மருத்துவத் தேர்வு வாரியத் தலைவர் திரு ஏ.ஆர். கிளாட்ஸ்டன் புஷ்பராஜ், இ.ஆ.ப., பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்குநர் டாக்டர் டி.எஸ். செல்வவிநாயம், மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் சாந்திமலர், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் டாக்டர் ஹரிசுந்தரி, உணவுப் பாதுகாப்பு கூடுதல் ஆணையர் மரு. தேவ பார்த்தசாரதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: