அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டுபவர்களிடம் 10 மடங்கு மின் கட்டணம் வசூலிக்க வேண்டும்: ஐகோர்ட் அதிரடி கருத்து

சென்னை: அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டியுள்ளவர்களிடம், 10 மடங்கு மின் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம், திருமுல்லைவாயலில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டியுள்ள வீட்டை காலி செய்யும்படி, ஆவடி தாசில்தாரர் அனுப்பிய நோட்டீசை எதிர்த்து கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட மூன்று பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் சத்தியநாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு நிலம் ஆக்கிரமிக்கப்படுவதை தடுக்க, ஆக்கிரமிப்பாளர்களுக்கு 10 மடங்கு மின் கட்டணம் வசூலிக்க வேண்டும்.

இது சம்பந்தமாக சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும். மனுதாரர்கள் 10 மடங்கு மின் கட்டணம் செலுத்த தயாராக இருந்தால், வீட்டை காலி செய்ய பிறப்பித்த நோட்டீசுக்கு இடைக்கால தடை விதிக்கப்படும். அதுகுறித்து மனுதாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். மதியம் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, 10 மடங்கு மின் கட்டணம் செலுத்த தயாராக இருப்பதாக மனுதாரர்கள் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. மேலும், குறிப்பிட்ட அந்த நிலம் பட்டா நிலம் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், குறிப்பிட்ட அந்த நிலத்தை அளந்து ஆக்கிரமிப்புகள் உள்ளதா என்று அறிக்கை தாக்கல் செய்யுமாறு ஆவடி தாசில்தாரருக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

Related Stories: