திருவள்ளூர்: சோழவரம் அருகே போதை மறுவாழ்வு மையத்தில் 14 வயது சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில், அந்த மையத்தின் ஊழியர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். சிறுவன் தாக்கப்பட்டு உயிரிழ்ந்தது பிரேத பரிசோதனையில் உறுதியான நிலையில், இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றபட்டது. கும்மிடிப்பூண்டி அடுத்த மெதிப்பாளையம் கிராமம் முத்தாரம்மன் கோயில் தெருவை சேர்ந்த தம்பதியினர் ராஜேஷ் - அகிலா இவர்களது மகன் மனோஜ்குமார் (14) தலையாரிபாளையம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்துள்ளான்.
இந்நிலையில் இடையில் பள்ளிக்கு செல்லாமல் இருந்துள்ள நிலையில் மனோஜ்குமாரை அவனது தாய் அகிலா சோழவரம் அடுத்த அழிஞ்சிவாக்கம் பகுதியில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் கடந்த ஜனவரி 21ம் தேதி சேர்த்துள்ளார். நேற்று முன்தினம் இரவு கழிவறைக்கு சென்ற போது மயக்கம் போட்டு மனோஜ்குமார் விழுந்துள்ளான். உடனே அருகில் இருந்தவர்கள் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே சிறுவன் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சோழவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து செங்குன்றம் காவல் துணை ஆணையர் மணிவண்ணன் போதை மறுவாழ்வு மையத்தில் நேரில் விசாரணை நடத்தினார். மேலும், பிரேத பரிசோதனைக்கு பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் கழிவறையில் வைத்து சிறுவனை கட்டையால் தாக்கியதில் வாந்தி, மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து போதை மறுவாழ்வு மைய உரிமையாளர் விஜயகுமார், ஊழியர்கள் யுவராஜ், டில்லிபாபு, ஜீவிதன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். போதை மறுவாழ்வு மையத்தில் 14 வயது சிறுவன் அடித்துக் கொலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.