கோவை கார் சிலிண்டர் விபத்து வழக்கில் ஏழு பேரிடம் 7 நாட்கள் போலீஸ் காவலில் விசாரணை: பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி

சென்னை: கோவை, உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கடந்த அக்டோபர் 23ம் தேதி கார் சிலிண்டர் வெடித்து  ஜமேஷா முபின் (28) என்பவர் பலியானார். இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) போலீசார் விசாரித்து வருகின்றனர். இதுதொடர்பாக இதுவரை 11 பேரை என்ஐஏ போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களிடமிருந்து தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவான ஆவணங்கள், முக்கிய ஆதாரங்கள், லேப்டாப் உள்ளிட்டவைகளை போலீசார் கைப்பற்றினர். இந்த வழக்கில் 5 பேரை கடந்த ஜனவரி மாதம் என்ஐஏ போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். விசாரணைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

அதன் தொடர்ச்சியாக மீண்டும் 7 பேரை போலீஸ் காவலில் விசாரிக்க பூந்தமல்லி தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் என்ஐஏ போலீசார் நேற்று மனு தாக்கல் செய்தனர். இதற்காக 7 பேரையும் நேற்று பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி இளவழகன் முன்பு ஆஜர்படுத்தினர்.மனுவை விசாரித்த நீதிபதி, முகமது அசாரூதீன் (23), பைரோஸ் (28), நவாஸ் (26), அப்சர்கான் (28), முகமது தவ்பீக் (25), சேக் இதயுதுல்லா (42), சனோபர் அலி (28) ஆகிய 7 பேரை 7 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

போலீஸ் காவல் முடிந்து பிப்.8ம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் 7 பேரையும் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து 7 பேரையும் என்ஐஏ போலீசார் பலத்த பாதுகாப்புடன் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். சென்னை, கோவை, குன்னூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு 7 பேரையும் அழைத்துச் சென்று என்ஐஏ போலீசார் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

Related Stories: