பொது இடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு பாலின சார்பற்ற கழிப்பிடங்களாக அறிவிக்க முடியுமா? தமிழ்நாடு அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பொது இடங்களில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான கழிப்பறைகளை, பாலின சார்பற்ற கழிப்பிடங்களாக அறிவிப்பது குறித்து விளக்கமளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரெட் ரோஜர்ஸ் என்பவர் தாக்கல் செய்த பொது நல மனுவில், 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டில் 22 ஆயிரத்து 364 திருநர்கள் உள்ளனர். இவர்களுக்கு முறையான கழிப்பிட வசதிகள் வழங்கப்படாமல், அடிப்படை உரிமை மறுக்கப்படுகிறது. தங்கள் விருப்பம் போல இரு பாலருக்கான கழிப்பிட வசதிகளை தேர்வு செய்து செல்லும்போது பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகிறார்கள்.

தனி கழிப்பிட வசதிகள் வழங்குவதன் மூலம் சமூகத்தில் இருந்து அவர்கள் விலக்கி வைக்கப்படுகிறார்கள். ஆண், பெண் கழிப்பிடங்கள் தவிர்த்து கூடுதலாக பாலின சார்பற்ற கழிப்பிடங்களை அமைப்பதன் மூலம் இவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும். தமிழ்நாட்டில் கல்வி நிறுவனங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் ஒருவர் செல்லும் வகையில் பாலின சார்பற்ற கழிப்பிடங்களை அமைக்குமாறு உத்தரவிட வேண்டும் என்றார்.

இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு பிளீடர் பி.முத்துக்குமார் ஆஜராகி, இது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்கிறோம் என்றார். இதைக்கேட்ட நீதிபதிகள், ஏற்கனவே ஆண், பெண் கழிப்பறைகள் தவிர்த்து மாற்றுத் திறனாளிகளுக்கும் தனி கழிப்பறைகள் உள்ளது. அவற்றை பாலின சார்பற்ற கழிப்பறைகளாக அறிவிப்பது குறித்து விளக்கமளிக்கும்படி  அரசுத் தரப்புக்கு உத்தரவிட்டு விசாரணையை பிப்ரவரி 7ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories: