ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குல்மார்க் என்ற இடத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 2 வெளிநாட்டினர் உயிரிழந்தனர். ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம் குல்மார்க் பகுதியில் உள்ள பிரபல பனிச்சறுக்கு மையத்தில் கடும் பனிச்சரிவு ஏற்பட்டது. அஃபர்வத் சிகரத்தில் ஏற்பட்ட இந்த பனிச்சரிவில் மலையடிவாரத்தில் உள்ள 10 வீடுகள் பனியில் புதைந்தன. இந்த பனிச்சரிவில், சில பனிச்சறுக்கு வீரர்கள் மற்றும் வழிகாட்டிகள் சிக்கிக்கொண்டனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த ராணுவம் அங்கு விரைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. கடும் பனிப் பொழிவால் இந்தப் பகுதியில் ராணுவ வீரர்கள் சென்றடையவே பெரும் சிரமத்தை எதிர்கொண்டது.