மாநகர பேருந்தை நடத்துனர்கள் இயக்கக் கூடாது: சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாளர் சுற்றறிக்கை

சென்னை: மாநகர பேருந்தை நடத்துனர்கள் இயக்கக் கூடாது என சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. ஒரு சில இடங்களில் ஓட்டுநர் இருக்கையில் நடத்துனர்கள் அமர்ந்து பேருந்தை இயக்குவதாக தெரியவந்துள்ளதாகவும், ஓட்டுனர்கள் மட்டுமே பேருந்தை இயக்குகிறார்கள் என்பதை மேலாளர்கள், மேற்பார்வையாளர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது, பணிமனையில் ஓட்டுநருக்கு பதிலாக நடத்துனர் பேருந்தை இயக்கி விபத்து ஏற்படுத்தியதை அடுத்து சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாளர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்; நமது மாநகர போக்குவரத்துக் கழக கிளைகளில் ஒரு சில இடங்களில் நடத்துநர்கள் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து பேருந்தை இயக்குவதாக தெரிய வருகிறது. மத்திய பணிமனையில் 28.01.2023 அன்று நடத்துநர், ஒட்டுநருக்கு பதிலாக பேருந்தினை எடுத்து டீஸல் பங்கினை இடித்து சேதமேற்படுத்தியுள்ளது இதனை உறுதி செய்கிறது.

எந்த சூழ்நிலையிலும் ஒட்டுநரை தவிர மற்றவர்கள் பேருந்தினை பணிமனை உள்ளே மற்றும் வெளியே கண்டிப்பாக இயக்க கூடாது. கிளைமேலாளர்கள் மற்றும் பணியிலுள்ள மேற்பார்வையாளர்கள் இது போன்ற நிகழ்வுகள் ஏற்படா வண்ணம் கண்காணிக்க வேண்டும். கிளைமேலாளர்கள் உரிய தகவலை ஓட்டுநர், நடத்துநர் மற்றும் அனைவரும் அறியும் வண்ணம் தகவல் பலகையில் ஒட்டவும், தொடர் முயற்சியாக பயிற்சி பள்ளிக்கு வரும் அனைவருக்கும் தெரியப்படுத்த இச்சுற்றறிக்கை மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது என சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாளர் சுற்றறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார். 

Related Stories: