ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலில் அதிமுக எடப்பாடி அணி சார்பில் யாரை வேட்பாளராக இறக்குவது என்பது தொடர்பாக முடிவு எடுக்க முடியாமல் திணறி வருகின்றனர். தொடக்கத்தில் முன்னாள் அமைச்சரும், மாநகர் மாவட்ட செயலாளருமான கே.வி.ராமலிங்கம் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்று கூறப்பட்டது. இதற்கு எடப்பாடியும் ஓகே தெரிவித்திருந்தார். ஆனால் தொகுதியின் கள நிலவரம் அறிந்த ராமலிங்கம் மெல்ல ஜகா வாங்கிக்கொண்டார். இதன்பிறகு முன்னாள் எம்எல்ஏ தென்னரசு, முன்னாள் துணை மேயர் பழனிசாமி, மாவட்ட மாணவரணி இணை செயலாளர் நந்தகோபால் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பெயர் அடிபட்டுக்கொண்டிருந்தது.
ஆனாலும் வேட்பாளரை முடிவு செய்ய முடியாமல் எடப்பாடி தரப்பினர் திணறி வருகின்றனர். இதுதொடர்பாக ஈரோட்டில் 3 முறை எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தும் முடிவு எட்டப்படவில்லை. நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு ஈரோடு அடுத்த வில்லரசம்பட்டியில் உள்ள ரிசார்ட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொடங்கிய ஆலோசனை கூட்டம் நள்ளிரவு 12 மணிவரை நீடித்தது. இதில் பேசிய அவர், தேர்தல் பொறுப்பாளர்கள் எவ்வாறு பணியாற்றுவது, வாக்காளர் பட்டியலின்படி வீடு வீடாக சென்று ஆய்வு செய்வது பற்றி ஆலோசனை வழங்கினார்.
மேலும் அவர் பேசுகையில், ‘கடந்த 2021ல் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட பலர் விருப்ப மனு கொடுத்துள்ளீர்கள். ஆனால் தற்போது இடைத்தோ்தலில் போட்டியிட எத்தனை பேர் விருப்பமனு தந்துள்ளீர்கள் என்பது எனக்கு தெரியும். கட்சியில் பகுதி பொறுப்பாளர், வார்டு பதவிக்கு மட்டும் நான், நீ என போட்டி போட்டுக்கொண்டு வருகின்றீர்கள். எல்லாவற்றையும் நான் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறேன்’’ என ஆவேசமாக பேசினார். நள்ளிரவு நேர குளிரையும் பொருட்படுத்தாமல், கட்சி நிர்வாகிகளை எடப்பாடி விளாசியது தேர்தல் களத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.