காஞ்சிபுரத்தில் ஒன்றிய அரசுப்பணி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு: ஆட்சியர் ஆர்த்தி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் ஒன்றிய அரசுப்பணி தேர்வாணையம் நடத்தும் பல்நோக்கு பணியாளர், ஹவில்தார் பணியிடத்திற்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளதாக ஆட்சியர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; ஒன்றிய அரசில் உள்ள 11,409 (இந்தியா முழுவதும்) பணிக்காலியிடங்களுக்கு பல்நோக்கு பணியாளர் (Multi Tasking Staff) மற்றும் Havidar என்ற பணியிடத்திற்கு ஒன்றிய அரசுப்பணி தேர்வாணையம் (Staff Selection Commission) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இத்தேர்வினை தமிழில் எழுதவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்காலியிடங்களுக்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், வயது வரம்பு 01.01.2023 தேதியில் 18 வயது முதல் 27ஆகும். வயது வரம்பில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினவருக்கு 5 வருடங்கள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 3 வருடங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடங்கள் வயது வரம்பில் தளர்வு உண்டு.

இப்பணிக்காலியிடத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 17.0.2023 ஆகும். மேலும், விவரங்கள் அறிந்து கொள்ளவும், விண்ணப்பிக்கவும் https://ssc.nic.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி கொள்ளலாம். காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வழியாக மேற்காணும் போட்டித்தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் 01.02.2023 நடத்திட உத்தேசிக்கப்பட்டு உள்ளது.

மேலும், இப்போட்டி தேர்விற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இவ்விலவச பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயன்பெறலாம். இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது புகைப்படம், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை நகல், போட்டித்தேர்வுக்கு விண்ணப்பித்தமைக்கான சான்று மற்றும் ஆதார் எண் ஆகிய விவரங்களுடன் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். மேலும், 044 27237124 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Related Stories: