கோடைக்கால கண் பராமரிப்பு

நன்றி குங்குமம் டாக்டர்

வளிமண்டல வெப்பநிலைக்கு நமது சருமமும், கண்களும் அதிக பாதிப்பிற்கு ஆளாகுபவையாக இருக்கின்றன. கோடைக்காலத்தில் நிலவும் அதிக ஈரப்பதம், நமது உடலின் இயற்கையான குளிர்விப்பு இயங்குமுறைகளில் குறுக்கீடு செய்து உடலின் நீர்ச்சத்தை நாம் இழக்குமாறு செய்கிறது. கண்களின் கண்ணீர் படலங்கள் அதிவேகமாக ஆவியாகிவிடுவதால் நமது கண்கள் மிக எளிதாகவே உலர்ந்துவிடுகின்றன. இது நிகழும்போது கண்ணில் எரிச்சலுணர்வு நமக்கு ஏற்படுகிறது. போதுமான கண்ணீர் இல்லாததால் அல்லது கண்ணீரின் தரம் குறைந்திருப்பதால் நமது கண்களால் அவைகளுக்கு ஈரப்பதத்தை வழங்க இயல்வதில்லை என்பதே இதற்குக் காரணம்.

அதிகரிக்கும் வெப்பநிலையானது, மாசு மற்றும் ஈரப்பதத்தோடு சேரும்போது கோடைக்காலத்தில் பலருக்கு கண் அழற்சிகள் ஏற்படுகின்றன. கண்களில் அரிப்பு, கண்கள் சிவத்தல், வீக்கம் மற்றும் எரிச்சல் ஆகியவற்றிற்கு இது வழிவகுக்கிறது. விழிக்கோளத்தின் மேற்புறத்தை மூடியிருக்கிற திசுவான கண் வெளிப்படலத்தின் அழற்சியான விழிவெண்படல அழற்சி, கோடையில் உருவாகக்கூடிய மற்றொரு பொதுவான பிரச்னையாகும். கண் சிவத்தல் (மெட்ராஸ் ஐ) மற்றும் ஒரு அல்லது இரு கண் இமைகளில் வீக்கம், அத்துடன் கண்களில் வலி மற்றும் சிவத்தல் ஆகியவை காணப்படுகிற ஒரு நுண்ணுயிரி தொற்றியான கண்ணிமைக்கட்டி போன்ற பாதிப்புகளும் கோடைக்காலத்தில் அதிகரிப்பது வழக்கமானதே.

இப்பாதிப்புகளுக்கான வாய்ப்புகள் இருந்தபோதிலும், கண் நோய்களிலிருந்து நம்மையே நம்மால் பாதுகாத்துக்கொள்ள முடியும்; நமது தினசரி வாழ்க்கையின் தரம் கடுமையாக பாதிக்கப்படாமல் இருப்பதை நம்மால் உறுதிசெய்ய இயலும். அதற்கு நீங்கள் பின்பற்றக்கூடிய கண் பராமரிப்பிற்கான ஐந்து வழிகாட்டல்கள் கீழே தரப்பட்டுள்ளன.

20:20:20 விதி கோடைக்காலத்தில் ஏர் கண்டிஷனர்களிடம் நாம் சரணாகதி அடைவது வழக்கமானதே. இன்றைய காலகட்டத்தில் கணினி மானிட்டர்களை நீண்டநேரம் உற்று நோக்கியவாறு பணியாற்றுவதும் அவசியமாகிவிட்டது. கண் நலத்தைப் பாதிக்கக்கூடிய ஒரு ஆபத்தான கலவையாக இந்த இரண்டும் இருக்கக்கூடும். முதலில் கண்கள் மீது குளிர்சாதன வசதியின் விளைவையும், தாக்கத்தையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஏசி இயக்கப்படும்போது அறையின் வெப்பநிலை குறைகிறது. அதைப்போலவே ஈரப்பதமும் குறையும். ஆனால், கண்ணீர் ஆவியாகும் செயல்பாட்டை மந்தமாக்குவதற்கு முக்கியமானதாக இருக்கும் மெய்பம் என அறியப்படும் ஒரு எண்ணெயை சுரக்கிற கண் சுரப்பிகளின் திறனையும் இது குறைத்து விடுகிறது. ஆகவே, குளிர்சாதன சூழலில் நமது கண்கள் மிக விரைவாகவே உலர்ந்து விடுகின்றன.

கணினி, டிவி திரையை நீண்ட நேரம் தொடர்ந்து பார்ப்பது இப்பிரச்னையை இன்னும் மோசமாக்கி விடுகிறது. நமது கண்கள் இமைக்கின்ற இயங்குமுறையில் இது குறுக்கீடு செய்கிறது. வழக்கமாக ஒரு நிமிடத்திற்கு சுமார் 15-20 தடவைகள் நாம் கண்களை இமைக்கிறோம். ஒவ்வொரு முறையும் இமைக்கும்போது கண்கள் மீது கண்ணீர் சீராகப் பரவ நாம் உதவுகிறோம்; இதுவே உலர்ந்துவிடாமல் கண்களை பாதுகாப்பாக வைக்கிறது. ஆனால், கணினியில் பணியாற்றும்போது சராசரியாக சுமார் 7-10 தடவைகள் மட்டுமே கண்களை நாம் இமைக்கிறோம்.

இதன் விளைவாக நமது கண்கள் உலர்வதால், டிஜிட்டல் அழுத்தம் என அறியப்படுகிற ஒரு பாதிப்பான கண் எரிச்சல் நமக்கு உருவாகிறது. இதன் காரணமாக, குளிர்சாதன வசதி உள்ள சூழலில் கணினிகளில் பணியாற்றுவது என்பது, உலர்ந்த கண்கள் என்ற பிரச்சனையை வரவழைப்பதற்கான வழியாகவே இருக்கிறது.

இத்தகைய பாதிப்புகளை அனைவராலும் முற்றிலுமாக தவிர்க்க இயலாது என்பது புரிந்துகொள்ளக்கூடியதே. ஆனால், இந்த ஆபத்தை நீக்குவதற்கு அல்லது குறைப்பதற்கு சுமார் 28 டிகிரி செல்சியஸ் என்ற மிதமான அளவில் ஏசியை நாம் இயக்கலாம். டிஜிட்டல் கண் அழுத்தம் என்ற இடரைத் தணிப்பதற்கு 20-20-20 விதியைப் பின்பற்றுவது முக்கியம்; திரையைப் பார்க்கும் ஒவ்வொரு 20 நிமிடங்கள் கால அளவிற்குப் பிறகு ஒரு 20 நொடி இடைவெளி விடவேண்டும் மற்றும் நாம் இருக்கும் இடத்திலிருந்து 20 அடி தூரத்திலுள்ள பொருளை / இடத்தைப் பார்க்க வேண்டும் என்பதே இந்த விதியின் பரிந்துரை.

பிரதிபலிப்பிற்கு எதிர்ப்புத்திறன் பூச்சு கொண்ட கண் கண்ணாடிகளை நீங்கள் பயன்படுத்தலாம். உங்கள் கண்கள் வழியாக அதிக வெளிச்சம் கடந்து செல்வதை கண்ணாடிகள் அனுமதிக்கும். இதன் காரணமாக, கண்களை அவைகள் ரிலாக்ஸ் செய்யும். உணவைச் சார்ந்தே கண்களும் இருக்கும் நாம் உண்ணும் உணவில் அதிகளவிலான திரவங்கள் கண்டிப்பாக இருக்கவேண்டும்; அப்போதுதான் உடலால் இழக்கப்படும் திரவச் சத்துக்களை விரைவாக அவைகள் ஈடுசெய்ய முடியும். ஒவ்வொரு நாளும் ஐந்து லிட்டர் நீர் அருந்துவது நல்லது; இளநீர், எலுமிச்சை / ஆரஞ்சு சாறு, கீரை, புதினா, கேரட், ஆப்பிள் மற்றும் தக்காளி ஆகியவற்றின் சாறுகளை அருந்துவதும் இதில் உள்ளடங்கும்; பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் மென் / குளிர்பானங்களைத் தவிர்ப்பதே நல்லது.

பழங்கள் மற்றும் காய்கறிகளைப் பொறுத்தவரை வழக்கமாகப் பரிந்துரைக்கப்படுபவற்றில் மாம்பழம், புரோக்கோலி மற்றும் முட்டைக்கோஸ் ஆகியவை உள்ளடங்கும். அழற்சியை விளைவிக்கிற முடிவுறா மூலக்கூறுகளை அழிக்கக்கூடிய மற்றும் திரவங்களை அதிகரிக்கக்கூடிய வைட்டமின்கள் மற்றும் உயிர் வளியேற்ற எதிர்ப்பிகள் சுரப்பதற்கு இந்த உணவுகள் உதவுகின்றன. எண்ணெய் அதிகமாக உள்ள உணவுகள் உட்கொள்வதை தவிர்ப்பது அல்லது குறைத்துக்கொள்வது முக்கியம்.

தனிப்பட்ட உடல் தூய்மை அவசியமாக இருக்கும்போது மட்டுமின்றி, வாய்ப்பிருக்கும்போதெல்லாம் வழக்கமான சூழல் வெப்பநிலையிலுள்ள குழாய் நீரைக் கொண்டு நமது முகங்களை நாம் கழுவ வேண்டும்; கண்களை நன்கு அலச வேண்டும். சூடான சூரிய வெளிச்சத்தில் மற்றும் மாசுபட்ட சுற்றுச்சூழலில் பயணித்ததற்குப் பிறகு வெளியிலிருந்து அலுவலகத்திற்கு அல்லது வீட்டிற்கு நாம் வரும்போது, இதை நாம் கண்டிப்பாக செய்ய வேண்டும்.

மெட்ராஸ் ஐ உட்பட, பல கண் தொற்றுகள் ஒருவருக்கொருவர் தொடர்பின் மூலமாகவே பரவுகின்றன. எனவே, பிறரால் பயன்படுத்தப்பட்டிருக்கக்கூடிய டவல்கள், கைக்குட்டைகள் மற்றும் பிற தனிப்பட்ட பொருட்களைப் பயன்படுத்துவதை தவிர்ப்பதும் முக்கியமானது. கண்ணில் அரிப்பு இருக்கும்போதும் கூட அவற்றை அழுத்தித் தேய்ப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்; ஏனெனில், இது தொற்றுப் பாதிப்பை இன்னும் தீவிரமாக்கிவிடும்.

பாதுகாப்பிற்கான பொருட்கள்

சூரிய ஒளியை நேரடியாகப் பார்ப்பதைத் தவிர்த்துவிடுங்கள். கண்ணின் பின்பகுதியில் உள்ள விழித்திரையின் ஒரு அங்கமான விழித்திரைப்பொட்டு (மக்குலா) - ஐ இது பாதிக்கும். வெயிலில் நீங்கள் வெளியே செல்லும்போது ஒரு தொப்பியையும், கண் கண்ணாடிகளையும் நீங்கள் அணியலாம். புற ஊதாக்கதிர்கள் மற்றும் இரண்டாம் புற ஊதாக்கதிர்களிலிருந்து பாதுகாப்பை வழங்குகிற குளிர் கண்ணாடிகளை தேர்ந்தெடுத்து அணிவது இன்றியமையாதது. அக்கண்ணாடிகளுள் மறைக்கப்பட்டுள்ள பவர் ஏதும்  இருக்கக்கூடாது. சாத்தியமானால், எத்தகைய குளிர்கண்ணாடிகளைப் பயன்படுத்துவது என்பது குறித்து ஒரு கண் மருத்துவ நிபுணரிடம் பரிந்துரையைப் பெறுங்கள்.

நீச்சல் குளத்தில் குளிக்கும்போது நீரிலுள்ள குளோரின் போன்ற வேதிப்பொருட்களிலிருந்து உங்கள் கண்களைக் காக்க பாதுகாப்பு கண் கண்ணாடிகளை அணியவும். உலர்ந்த கண்களுக்காக மருந்தகங்களில் விற்பனை செய்யப்படும் ‘டியர்ஸ்’  ஐ பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால், கண் மருத்துவ நிபுணர்களிடம் கலந்தாலோசித்து அவர்களது பரிந்துரைப்பை பெற்றதற்குப் பிறகு மட்டுமே இதைப் பயன்படுத்த வேண்டும்.

வாழ்க்கை முறை திருத்தங்கள்

கான்டாக்ட் லென்ஸ்களை அணிபவர்கள் முடிந்த அளவிற்கு சூரியவெளிச்சத்திற்கு நேரடியாக வெளிப்படுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.  உலர்ந்த கண்கள், சிவந்த கண்கள், கண் அழற்சி மற்றும் கண்ணிமைக் கட்டிகள் போன்றவை தற்காலிகமானதாக அல்லது பருவகால கண் பாதிப்புகளாக தோன்றக்கூடும்; ஆனால், நீண்டகாலம் நீடிக்கின்ற பாதிப்பு விளைவுகளுக்கு இவை வழிவகுக்கக்கூடும். நீண்டகால அடிப்படையில் இவைகள் விழித்திரையையும், கருவிழியையும் பாதிக்கக்கூடும். ஆகவே, இந்த பரிந்துரைகளுக்கு கவனமும், மதிப்பும் அளித்து அவைகளை கடைப்பிடிப்பது சிறந்தது. இந்த கோடைக்காலத்தில் கண் பராமரிப்பு மீது சமரசம் செய்து கொள்ளாமல் உடல்நலத்தின் மீது அக்கறையுள்ள தொலைநோக்கு சிந்தனையாளர்களாக செயல்படுங்கள்.

 - யாழ் ஸ்ரீதேவி

அதிர்ச்சி தரும் ஆய்வு

கோவிட் பெருந்தொற்றுப் பரவலுக்குப் பிறகு பணியாற்றுகிற நபர்கள் மத்தியில் கணினி திரையைப் பார்க்கிற நேரம் ஒரு நாளுக்கு சுமார் 3 மணி நேரங்களிலிருந்து, 8 மணி நேரங்கள் வரை அதிகரித்திருப்பதை ஆய்வுகள் காட்டுகின்றன.  குழந்தைகளும் இதற்கு விதிவிலக்கல்ல.  

வயது வந்தவர்களுக்கு நிகராக, சில குழந்தைகள் அவர்களைவிட அதிக மணி நேரங்கள், திரைகளுக்கு முன்பே அமர்ந்துகொண்டு தங்கள் நேரத்தை செலவிடுகின்றனர்.  இதன் பின்விளைவாக பத்தாண்டுகளுக்கு முன்பு 15% -க்கும் குறைவாக இருந்த உலர்ந்த கண்கள் பாதிப்பு விகிதமானது சமீப ஆண்டுகளில் 30-40 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது.

Related Stories: