போடி : போடி பகுதியில் மாமரங்கள் பூத்துக்குலுங்குவதால் மாம்பழங்களின் விளைச்சல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.போடி மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள குரங்கணி, கொட்டகுடி, அடகுபாறை, பீச்சாங்கரை, இலங்கா வரிசை, முந்தல், முனீஸ்வரன் கோயில் பரவு, பரமசிவன் கோயில்மலை அடிவாரம், தொடாடு, மங்களகோம்பை, வடக்குமலை, வலசத்துறை, முட்டுகோம்பை, சிறக்காடு ஆகிய பகுதியில் 50 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் மா விவசாயம் செய்து வருகின்றனர். வருடத்தில் நான்கு மாதம் சீசனாக கொண்ட இந்த விளைச்சலில் ஏக்கருக்கு சுமார் ரூ.1.50 முதல் இரண்டு லட்சம் வரை செலவு செய்கின்றனர். மேலும் இயற்கை உரம் இடுதல், மரங்களில் கவாத்தெடுத்தல், களைகள் பறித்தல், மரங்களுக்கு கீழ கின்னி போடுதல், தண்ணீர் பாய்ச்சுதல் என வருடம் முழுவதும் தொடர்ந்து பராமரித்து பணி செயது வருகின்றனர்.