தாம்பரம்: தாம்பரம் - திருநீர்மலை சாலையில் கடப்பேரி பகுதியில் ஆதிதிராவிடர் நல நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த, பள்ளியை கடந்த 1998ம் ஆண்டு டி.ஆர்.பாலு எம்.பி துவக்கி வைத்தார். பின்னர் 2001-02ல் தென்சென்னை எம்பியாக டி.ஆர்.பாலு இருந்தபோது, அவரது தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.10 லட்சம் ஒதுக்கி புதிய கட்டிடம் கட்டப்பட்டது. இந்த பள்ளியில் கடப்பேரி, புலிகொரடு, பழைய தாம்பரம், ரங்கநாதபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக சரியான பராமரிப்பு இல்லாததால் பள்ளி கட்டிடங்கள், இருக்கை உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்து, கழிவறை வசதி இன்றி மாணவர்கள் அவதிப்பட்டனர்.
மேலும், இங்கு விளையாட்டு மைதானம் இல்லை. பள்ளி கட்டிடங்களுக்கு நடுவே சாலை செல்வதால் மாணவர்களுக்கு அது இடையூறாக இருந்தது. இப்பள்ளியில் சரியான கட்டமைப்பு மற்றும் வசதிகள் இல்லாததால் கடப்பேரி, புலிகொரடு, பழைய தாம்பரம், ரங்கநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் கல்யாண் நகர், சேலையூர் பகுதிகளில் உள்ள மாநகராட்சி பள்ளிகளுக்கு சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் சென்று படிக்கும் நிலை ஏற்பட்டது. எனவே கடப்பேரி, புலிகொரடு, பழைய தாம்பரம், ரங்கநாதபுரம் பகுதி மாணவர்கள் எளிதில் பள்ளிக்கு சென்று படிக்க வசதியாக, அரசு ஆதிதிராவிடர் நல நடுநிலைப் பள்ளியை சீரமைக்கவும், புதிய கட்டிடம் அமைத்து தர கோரியும், மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சார்பில், எம்பி டி.ஆர்.பாலு, தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா, மேயர் வசந்தகுமாரி ஆகியோருக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.