அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விவகாரத்தில் ஐகோர்ட் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்: நில அபகரிப்பில் போதிய ஆதாரம் உள்ளது: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு

புதுடெல்லி: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்  நில அபகரிப்பு வழக்கில் உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவை ரத்து செய்து தடை விதிக்க வேண்டும் என தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை துரைப்பாக்கத்தில் மீன் வலை உற்பத்தி நிறுவனம் அமைந்துள்ள எட்டு கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அவரது மருமகனான நவீன்குமார் ஆகியோருக்கும், அவரது சகோதரர் மகேஷ் என்பவருக்கும் பிரச்சினை இருந்து வந்தது. இந்த வழக்கில் ஜெயகுமாருக்கு எதிராக மகேஷ் புகார் அளித்திருந்தார்.

இதையடுத்து அந்த புகாரின் அடிப்படையில் ஜெயக்குமார், அவரது மகள் ஜெயபிரியா மற்றும் அவரது மருமகன் நவீன்குமார் ஆகியோர் மீது கொலை மிரட்டல், சதித் திட்டம் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெயக்குமார் வழக்கு தொடர்ந்தார். அதில் தனது மருமகனின் சகோதரர் மகேஷ் அளித்த பொய் புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும்,   தம்மை பற்றி அவதூறாக கருத்துகளை வெளியிட்டதால் மகேஷ் ரூ1 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

அதேப்போன்று கடந்த 2016-ம் ஆண்டு ஜெயக்குமார் அமைச்சராக இருந்ததால் புகார் அளிக்க முடியவில்லை என்று மகேஷ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உயர்நீதிமன்றம், ஜெயக்குமார் அவரது மகள் ஜெயப்பிரியா மற்றும் அவரது மருமகன் நவீன்குமார் ஆகியோர் மீதான வழக்கை ரத்து செய்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில்,மேற்கண்ட விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜோசப் அரிஸ்டாட்டில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

அதில்,‘‘சென்னை துரைப்பாக்கத்தில் மீன் வலை உற்பத்தி நிறுவனம் அமைந்துள்ள எட்டு கிரவுண்ட் நில அபகரிப்பு விவகாரத்தில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மருமகனான நவீன்குமார், மகள் ஜெயப்பிரியா ஆகியோர் நில அபகரிப்பு செயல்களில் ஈடுபட்டுள்ளதில் போதிய ஆதாரம் உள்ளது. இருப்பினும் அதனை கருத்தில் கொள்ளாமல் சென்னை உயர்நீதிமன்றம் அவர்கள் மீதான வழக்கை ரத்து செய்துள்ளது. அதனால் அதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Related Stories: