பொள்ளாச்சி : பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணைக்கு, விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக உள்ளது. இருப்பினும், படகு சவாரி தொடர்ந்து ரத்தால் ஏமாற்றமடைகின்றனர்.பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணைக்கு உள்ளூர் மற்றும் வெளியூர், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அரசு விடுமுறை மற்றும் முக்கிய விஷேச நாட்களின்போது சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும். கடந்த டிசம்பர் மாதம் பள்ளி அரையாண்டு விடுமுறை, கிறிஸ்துமஸ் விடுமுறை, புத்தாண்டு விடுமுறையும். இதைதொடர்ந்து, பொங்கல் பண்டிகை விடுமுறை நாட்களிலும் சுற்றுலா யணிகள் வருகை அதிகமாக இருந்தது.
அதன்பின், பிற நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் சற்று குறைவாக இருந்தாலும், சனி மற்றும் ஞாயிறு என விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாகவே உள்ளது. அதிலும், மதியம் முதல் மாலை வரை சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை வழக்கத்தைவிட அதிகரிக்கிறது. இதில் நேற்று விடுமுறையையொட்டி, ஆழியார் அணை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் திருப்பூர், ஈரோடு, சேலம், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்திருந்தனர்.அங்குவந்தவர்கள், அணையைதொட்டுள்ள பூங்காவை கண்டு ரசித்தனர். வெயிலின் தாக்கத்தையும் பொருட்படுத்தாமல், அணையில் ரம்மியமாக உள்ள தண்ணீரின் அழகை கண்டு ரசித்தனர்.
இதில் படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வமுடன் வந்திருந்தனர். ஆனால், தொடர்ந்து படகு சவாரி ரத்து என்பதால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.ஆழியார் அணை மற்றும் பூங்காவின் அழகை ரசித்த சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானவர்களும், வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கவியருவிக்கும் ஆர்வமுடன் சென்றனர்.இதில், மழையின்றி கவியருவியில் தண்ணீர் வரத்து மிகவும் குறைந்துள்ளது. ஆனாலும் அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிப்பு தொடர்ந்துள்ளது.இதனால். கவியருக்கு வந்த சுற்றுலா பயணிகள் பலரும், அறிவுத்திருக்கோயில் அருகே உள்ள சோதனை சாவடியிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டனர். இதன் காரணமாக, சோதனை சாவடி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வன செயல் விளக்க மையத்துக்கு சென்று, வனத்தைபற்றிய தகவல்கள் அடங்கிய சிற்பங்களை கண்டு ரசிக்கின்றனர். இருப்பினும், தடையை மீறி சுற்றுலா பயணிகள் கவியருவிக்கு செல்கின்றார்களா என, வனத்துறையினர் கண்காணிக்கின்றனர்.