திருவொற்றியூர்: மணலி ஜாகிர் உசேன் தெருவை சேர்ந்தவர் விஜயலட்சுமி (30). கூலி வேலை செய்து வருகிறார். இவரது மகன் குபேரன் (5). விஜயலட்சுமி கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து கடந்த சில ஆண்டுகளாக தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை தனது குழந்தையை தாத்தா, பாட்டியிடம் விட்டு விட்டு அவர் வேலைக்கு சென்றார்.
குபேரன் வாசலில் விளையாடிக் கொண்டிருந்தத்தான். அப்போது எதிர்பாராத விதமாக அருகில் உள்ள குட்டையில் தவறி விழுந்தான். பேரன் மாயமானதால் தாத்தா, பாட்டி இருவரும் அங்கும் இங்கும் தேடியபோது, குட்டையில் சிறுவன் விழுந்தது தெரிந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்த மணலி போலீசார் விரைந்து வந்து பார்த்தபோது சிறுவன் இறந்தது தெரிந்தது. இதை அடுத்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.