அகமதாபாத்: குஜராத் மாநில பஞ்சாயத்து துறையின் சார்பில் 1,181 உதவி கிளார்க் பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தேர்வை எழுத மொத்தம் 9.53 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். மாநிலம் முழுவதும் உள்ள 2,995 மையங்களில் நேற்று தேர்வை நடத்த மாநில அரசு சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேகத்துக்குரிய இஸாம் என்பவரிடம் இருந்து தேர்வு வினாத்தாளின் நகலை கைப்பற்றினர். தேர்வு நடைபெறுவதற்கு சில மணிநேரத்துக்கு முன்னர் வினாத்தாள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. இதற்கிடையே, இந்த முறைகேடு தொடர்பாக வதோதராவை சேர்ந்த 15 பேரை தீவிரவாத தடுப்பு படை போலீசார் கைது செய்தனர்.